செவ்வாய், ஜூன் 27, 2017

நேர்காணல் - றியாஸ் குரானா

http://thecatamaran.org என்ற இணையத்தளத்தில், தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த எனது நேர்காணல். முழுமையாக உங்கள் பார்வைக்கு.


றியாஸ் குரானா

தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு கலகக் காரனாக அறியப்படும் இவர் இலங்கையின் கிழக்கிலுள்ள அக்கரைப்பற்று எனும் சிறுகிராமத்தைச் சேர்ந்தவர். தன்னை ஒரு இலக்கிய வாசகன், கவிஞன், விமர்சகன் என பரந்தபட்ட தளங்களில் ஆழமாகப் பதித்துக் கொண்டவர். இதுவரை 5 புத்தகங்களை எழுதி nவியிட்டிருக்குமிவர், பெருவெளி இலக்கியச் சிற்றிதழின் நிறுவனர்களில் ஒருவர். தமிழ்மொழி தவிர்ந்த பல பிறமொழிகளில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிலும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு pழநஅhரவெநசஇ யடடிழநவசலஇ pழநவசலளழரிஇ அரளந iனெயை போன்ற உலகளவில் பிரபலமான இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. நவீனத்துவம், பின்நவீனத்துவம் சார்ந்து தொடர்ச்சியாக உரையாடுவதோடு, கவிதையியல் தொடர்பான கோட்பாட்டுரீதியிலான கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.

கட்டுமரம் 1 :தமிழ் இலக்கியச் சூழல் பற்றிய வரலாறு சார்ந்து உங்களுடைய பார்வை என்ன? தமிழ் இலக்கியம் கடக்கவிருக்கும் பாதை எப்படி இருக்கப் போகிறது என உங்களால் யூகிக்க முடிகிறது?

றியாஸ் குரானா : தமிழ் இலக்கியம் சார்ந்த வரலாற்றுரீதியலான பார்வை என்பது மிக சிக்கலான ஒன்று. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழ் இலக்கியம் என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு அதிகமான காலத்தைக்கொண்டிருப்பது முதலாவது விசயம். இரண்டாவது விசயம், அனைத்து மொழிகளிலும் இலக்கியம் என்பது பலவகையான போக்குகளையும், வரலாற்று குழப்பங்களையும் கொண்டிருப்பதைப்போல தமிழ் இலக்கியங்களுக்குமுண்டு.
வரலாறு என்பது புனைவுதான் என பின்நவீன சிந்தனையாளர்கள் அறிவித்து விவாதங்களை மேற்கொண்ட பின்னர், ஏற்பட்ட முக்கியமான குழப்பமாக இதைக்கருதலாம். அரசர்களினதும், அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவர்களும்தான் இந்த வரலாற்றை தீர்மானிக்க காரணமாக இருந்தனர். அவர்கள் தாங்கள் விரும்பிய வரலாற்றை, தாங்கள் விரும்பிய கோணங்களிலிருந்து முன்வைத்தனர். ஆக, தமிழ் இலக்கியத்தினை வரலாற்றுரீதியிலான ஒரு பார்வைக்குட்படுத்துவது, பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனெனில், அவர்கள் வெறுமனே ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு தகுதியாக மட்டுமே இருக்கும்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்.
அதற்கு அப்பால், மாற்றுவரலாறுகள் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டிருந்தாலும், அந்த வரலாற்றை எழுதுமளவு போதிய இலக்கியப் பிரதிகள் இல்லை. இன்று தமிழில் இருக்கின்ற தொகுக்கப்பட்ட அனேக இலக்கியங்கள் ஒரு தேர்வுசார்ந்தது மட்டுமே. இதற்கு அப்பால், மிக அதிகமான இலக்கியங்கள் அழித்தொழிக்ப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருப்பவை அதிகாரங்களுக்கும், அந்வக்காலங்களில் ஆட்சியிலிருந்த அரசுகளுக்கும் சார்பானது எனக்கருதப்பட்டவைகளும், தங்களுக்கு பாதிப்பற்றது என கருதப்பட்வைகளும்தான். சமண, வைணவ இலக்கிய மாற்றுக்குரல்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அதைவிடவும், இங்கு அத்துமீறி நாடுகளை சுரண்டிய ஐரோப்பிய நாடுகளும் இந்த இலக்கியங்களைத் தொகுப்பதில் பல தடைகளையும், தணிக்கைகளையும் விதித்திருக்கிறது என்பதுதான் வரலாறு. ஆக, வரலாற்றுரிதிலான பார்வை என்பது இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் பெரும்சிக்கலான ஒன்றுதான்.

கடக்கவிருக்கும் பாதை என்று தமிழ் இலக்கியத்தை முன்னிறுத்தி வியாக்கியானம் செய்வதென்பது, கிட்டத்தட்ட ஜோசியம் சொல்வதற்கு நிகரான ஒன்றுதான். எனினும், மற்றவர்களைவிட சற்றும் வேறுபட்ட விதத்தில் ஒரு சுவரஸ்யமான முறையில் விபரிக்கலாம் என நினைக்கிறென்.
ஐரோப்பிய நாடுகள், சுரண்டுவதற்காகவும், பொருளாராதாரரீதியில் தங்களை நிலைநிறுத்துவதற்காகவும், மிகக்கீழ்த்தரமான முறையில் பிறநாடுகளை நடாத்தினாலும், அவர்களோடு கொண்டுவரப்பட்ட 'நவீனத்துவ' சிந்தனைமுறைகளும் தமிழ் இலக்கியத்தை பாதித்தன என்பதுதான் உண்மை. இன்று தமிழில் இருக்கின்ற நாவல், சிறுகதை, நவீன கவிதை, விமர்சன முறைமைகள், கோட்பாட்டுரிதியலான அணுகுமுறைகள், எனத்தொடங்கி ஜனநயாகம் போன்ற அரசியல் கருத்தாங்கங்கள்கூட தமிழ் மொழிக்கு வெளியில் இருந்து வந்தவைதான். அதற்கு முன்பு, சமஸ்கிரத மொழியின் தாக்கத்தில் தமிழ் இலக்கியம் இருந்தது என்பதும் இங்கு முக்கியமானது. ஆனாலும், இவைகளுக்கு அப்பால், தமிழ்மொழிக்கென்று கோட்பாடுகளும், கவிதை முறைமைகளும் இல்லாமலில்லை. அதேநேரம், தமிழ்மொழி, தனக்கு வெளியிலிருந்து வந்த அனைத்தையும் உள்ளெடத்தது என்று சொல்லிவிடவும் முடியாது. தனக்கு பாதிப்பற்ற வகையில்தான் அவைகளைக் கையாண்டது என்பதுதான் வரலாறு.
ஆக. எதிர்காலத்தில், தனது பாதை என்பது உலகுதழுவியதாக அமையும் எனச் சொல்லலாம். அதற்கான தேவையும் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

கட்டுமரம் 2: ரஷ;ய மற்றும் மேலைத்தேய இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களுக்கு இருக்கும் உறவுநிலை பற்றிய உங்களுடைய புரிதல் என்ன?

றியாஸ் குரானா : தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஸ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஸ்ய இலக்கியத்திற்கு பெரும் கவர்ச்சி இருந்தது. அதற்கு தமிழும் விதிவிலக்கல்ல. இன்றுகூட அதன் தாக்கம் மிகவும் பாரதூரமான நிலையிலே இருக்கிறது. சோசலிச யதார்த்தவாதம், என்பது ஒரு கருத்துநிலை. அதாவது இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துநிலை என்பதை மறந்து, அதுதான் இயற்கையானது என்று பலர் நம்மும்படி மாறியிருக்கிறது. பிரதிபலிப்பு, என்பதையே இலக்கியச் செயல் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையும் நீடிக்கிறது. அதாவது, இலக்கியம் என்பது நிலவுகிறசூழலை அப்படியே எழுத்தில் பிரதிபலித்தல் என்றும், மிச்சமின்றி அனைத்தையும் பிரதிபலிக்க முடியும் என்ற நிலையை சிந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைவரை இட்டுச்சென்றது என்பதுதான் உண்மை. ஒருவகையில் இது தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த சாபமும்கூட.
90களில், ரஸ்யாவின் உடைவுதான், ஓரளவு தமிழ்மொழியை சுதாகரித்துக்கொண்டு புதிய திசைகளை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்த்தியது எனலாம். ஆனால், தொண்ணூறுகளுக்கு முன்பே, இந்த இலக்கிய நிலவரங்களுக்கு மாற்றமான ஒரு போக்கு தமிழில் முன்னெடுக்கப்பட்டதுதான் எனச் சொல்லவேண்டும். இருத்தலியம், அமைப்பியல், பின் அமைப்பியல், என தொடரும் கருத்தியல் நிலவரங்கள் இலக்கியம் குறித்த கருத்துநிலைகளில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தாமில்லை. அதன் பிறகு பின்நவீனத்துவம் தமிழைச் சந்தித்தபோது, தமிழ் இலக்கியம் என்ற முன்வைப்பு கலகலத்துப்போயிற்று. தமிழில் இலக்கியங்கள் என்பதாக அது மாற்றமடைந்தது. அதாவது, தமிழ் இலக்கியம் என்ற ஒற்றைப்போக்கும், அதன் பொதுத்தன்மை என்பதும் கேள்விக்குள்ளாகி, பலவகையான போக்குகளைக்கொண்ட இலக்கியங்கள் தமிழில் உண்டு என்றும், பொதுப்போக்கு என்ற ஒன்றை இலக்கியத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை தவிர்க்கவுமான செயற்பாடுகள் மேலெழும்பின. ஆக, தமிழ் இலக்கியம் 'பன்மையான' தன்மையை முன்னிறுத்த எத்தனித்தது என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், தமிழ் மொழியை அதன் இலக்கியங்களை அதிகம் ஈர்த்தது. அதன் பிறகுதான் தமிழ் இலக்கியத்தின் புனைவு சார்ந்த திசை பெரும் மாற்றங்களை உருவாக்கின. நமக்கு தமிழ் எழுத்தாளர்களைவிட, போர்ஹே, கார்சியா மார்க்வெஸ் போன்றவர்கள் அதிகமாக தெரியவந்தார்கள்.

சரி நிற்க, இலக்கியத்தை இப்படி பொதுப்படையாக தொகுத்துப்பார்க்கலாம், அமெரிக்க இலக்கியம் என்பது பாதுகாப்பான இலக்கியமாகும். பெருவாரியான மக்களின் பொதுமனநிலை எனக் கருதத்தக்க ஒன்றை, அதற்கு பாதிப்பு நேராத வகையில் இலக்கியப்பிரதிகளில் கொண்டுவருவது என்பதைத்தான் இப்படிச் சொன்னேன். அதேநேரம் குப்பைகளாக கருதிய இலக்கியப் பிரதிகளிலிருந்து உத்திகளையும், அதன் மையப்பொருட்களையும் எடுத்து, இந்த பொதுப்போக்கான பாதுகாப்பு இலக்கியத்திற்கு எதிரான குரல்களும் அங்குண்டுதான்.

ஐரோப்பிய இலக்கியத்தின் பொதுப்போக்கு, 'சாய்மணை இலக்கியம்' அதாவது, ஓய்வு நேரத்தை கழிப்பதற்காக உற்பத்தி செய்யப்படுபவையாக கருதப்படும் எழுத்துக்கள். இதற்கு மாற்றமான, ஐரிஸ் எழுத்துக்கள், மற்றும் கீழ்மையின் அழகியல் போன்வைகளும் அங்கு உண்டு.

ஆசிய இலக்கியத்தை – ஒப்பாரிகளும், அழுகைகளும் எனலாம். இது பொதுப்போக்காக இருந்தாலும், அரேபிய இலக்கியங்கள், எதிர்க்குரல்களாகவும், கலகக்குரல்களாகவும் இருக்கின்றன.

ஆபிரிக்க இலக்கியம் 'அனுமான யாதார்த்தவாதம்' எனலாம். அனேகமாக யதார்த்தம் என்பதை அனுமானிப்பதாக அவர்களின் எழுத்துக்கள் இருக்கின்றன. எனினும், சிறுகதையாடலை தனக்கான இலக்கியமொன்றை 'கருப்பு இலக்கியம்' என்றவகையில் முன்வைப்பது முக்கியமானது. அதனூடாக ஒரு கதையாடலை விவாதிப்பதுதான். விளிம்புநிலையில் இருத்தப்பட்டதாக உணரும் சனக்கூட்டம் தனது இருப்பினை கவனத்திற்கொண்டு ஒரு அரசியல் செயற்பாடாக அந்த இலக்கியத்தை கட்டமைக்கின்றனர்.

இப்படி பன்மையான இலக்கியப்போக்குகளை உலகளவில் நாம் சந்திக்க முடியும். அதுபோலதான், தமிழ் இலக்கியமும் இந்தப்போக்குள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது. அதேநேரம் தனக்கான தனித்த ஒரு அடையாளத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியம் தனது வரலாற்றுரீதியிலான தனித்தன்மைகளை பேணிக்கொண்டு , உலகளவில் இருக்கின்ற இலக்கியப்போக்குகளையும் கவனித்து தனக்கான பாதையை அமைக்கிறது என்பதுதான் உண்மை.

கட்டுமரம் 3: ஈழத்து தமிழ் இலக்கியத்தில் நிற்கும் ஒரு புள்ளியான நீங்கள் பன்மைத்துவ சமூகங்களுக்குள் இலக்கியம் சமரசத்தை எப்படி வளர்க அல்லது நிலைக்கச் செய்யும் என கருதுகின்றீர்கள்?

றியாஸ் குரானா: நிச்சயமாக சமூகங்களுக்கிடையில் சமரசத்தை வளர்க்காது. உண்மையில் இலக்கியத்தின் வேலை அதுதானா? அதாவது இனங்களுக்கிடையில் சமரசத்தை வளர்ப்பதுதானா இலக்கியத்தின் பணி? இது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால், இலக்கியத்திற்கு இப்படி சமரசத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என சிறுபிள்ளைத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பிற்போக்கான நம்பிக்கை மாத்திரமே.


த கட்டுமரன் : பன்மைத்துவ சமூகங்களுக்குள் இலக்கியமானது
சமரசத்தை எப்படி வளர்க அல்லது நிலைக்கச் செய்யும் என
கருதுகின்றீர்கள்?

றியாஸ் குரானா: சமரசத்தை வளர்க்காது என நான் கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு. இலக்கியத்தை முன்வைத்துத்தான் இந்தக் கூற்றை சொல்ல வேண்டி வந்தது. சமரசத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பது ஏனெனில், சமூகங்களிடையே தற்போது சமரசம் இல்லை என்பதால்தான். அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் இலக்கியத்திற்கென்று தனியானதும், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒற்றையான பணி ஏதும் இல்லை என்பது இன்னுமொரு முக்கியமான விசயம். எனினும், தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த மட்டில், ஒரு விசயத்தை சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கிறேன். (தமிழ் இலக்கியம் என்பதைவிடவும் பொதுவாக இலக்கியம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்)
அதிகமும் இங்கு பின்பற்றப்படும் இலக்கியம் சாரந்த பார்வை என்பது, யதார்த்தத்தை பிரதிபலித்தல் என்பதுதான். யதார்த்தத்தை பிரதிபலிக்க முடியுமா? என்ற கருத்தியல் ரீதியிலான அலசலுக்குள் நுழையாமல், வேறு திசையில் இதை விவரிக்க விரும்புகிறேன்.


சிங்கள மொழிச்சமூகம் எப்படியும் அதிகாரத்தரப்பாக இருப்பதால் அவர்கள்தான் தங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றங்களையும் நெகிழ்ச்சிகளையும் கொண்டுவர வேண்டும்.
சூழல் என்பது சமூகங்களிடையே சமரசமற்று அல்லது நல்லிணக்கமற்று இருக்கிறது என கருதுவதால்தான், அதை செய்வதற்கு முயல வேண்டிய தேவை இருக்கிறது என எடுத்துக்கொண்டால், அதுதானே இங்கு யதார்த்தமாக இருக்கும். ஆகவே, இலக்கியம் சூழலை பிரதிபலிக்கும் என நம்பினால், இங்கு உருவாகும் இலக்கியங்களும், நல்லிணக்கமற்ற அல்லது சமரசமற்ற சூழலைத்தானே பிரதிபலிக்க முடியும். அப்படி எனில், இந்த இலக்கியங்கள் எப்படி நல்லிணக்கத்திற்கும், சமரசத்திற்கும் உதவ முடியும்?

இதைவிடவும் முக்கியமான சில விசயங்களை இங்கு தடங்காட்ட விரும்புகிறேன். அனைத்து அறிவியல் மற்றும் நீதி, அரசியல் கருத்தாக்கங்கள் போன்ற மக்களை, சமூகங்களை சமரசத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் இணங்கச் செய்வதற்குத்தானே இதுவரை முயன்றிருக்கின்றன. அப்படி அறிவித்துக்கொண்டுதானே உலகெங்கும் செயல்படுகின்றன. அவைகளால் ஏன் இதுவரை முடியாதுபோயிருக்கிறது? இவை போலதான், வரலாற்றில் இலக்கியமும் பெரும் அக்கறைகொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது.

த கட்டுமரன் : அப்படியாயின் பன்மைத்துவ சமூகங்களுக்கிடையில்
சமரசத்தை ஏற்படுத்த எப்படியான வழிகளைக் கையாள முடியும்
நினைக்கிறீர்கள்?

றியாஸ் குரானா – சமரசத்தை வளர்க்காது என நான் கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு. இலக்கியத்தை முன்வைத்துத்தான் இந்தக் கூற்றை சொல்ல வேண்டி வந்தது. சமரசத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பது ஏனெனில், சமூகங்களிடையே தற்போது சமரசம் இல்லை என்பதால்தான். அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் இலக்கியத்திற்கென்று தனியானதும், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒற்றையான பணி ஏதும் இல்லை என்பது இன்னுமொரு முக்கியமான விசயம். எனினும், தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த மட்டில், ஒரு விசயத்தை சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கிறேன். (தமிழ் இலக்கியம் என்பதைவிடவும் பொதுவாக இலக்கியம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்)
அதிகமும் இங்கு பின்பற்றப்படும் இலக்கியம் சாரந்த பார்வை என்பது, யதார்த்தத்தை பிரதிபலித்தல் என்பதுதான். யதார்த்தத்தை பிரதிபலிக்க முடியுமா? என்ற கருத்தியல் ரீதியிலான அலசலுக்குள் நுழையாமல், வேறு திசையில் இதை விவரிக்க விரும்புகிறேன்.
சூழல் என்பது சமூகங்களிடையே சமரசமற்று அல்லது நல்லிணக்கமற்று இருக்கிறது என கருதுவதால்தான், அதை செய்வதற்கு முயல வேண்டிய தேவை இருக்கிறது என எடுத்துக்கொண்டால், அதுதானே இங்கு யதார்த்தமாக இருக்கும். ஆகவே, இலக்கியம் சூழலை பிரதிபலிக்கும் என நம்பினால், இங்கு உருவாகும் இலக்கியங்களும், நல்லிணக்கமற்ற அல்லது சமரசமற்ற சூழலைத்தானே பிரதிபலிக்க முடியும். அப்படி எனில், இந்த இலக்கியங்கள் எப்படி நல்லிணக்கத்திற்கும், சமரசத்திற்கும் உதவ முடியும்?

இதைவிடவும் முக்கியமான சில விசயங்களை இங்கு தடங்காட்ட விரும்புகிறேன். அனைத்து அறிவியல் மற்றும் நீதி, அரசியல் கருத்தாக்கங்கள் போன்ற மக்களை, சமூகங்களை சமரசத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் இணங்கச் செய்வதற்குத்தானே இதுவரை முயன்றிருக்கின்றன. அப்படி அறிவித்துக்கொண்டுதானே உலகெங்கும் செயல்படுகின்றன. அவைகளால் ஏன் இதுவரை முடியாதுபோயிருக்கிறது? இவை போலதான், வரலாற்றில் இலக்கியமும் பெரும் அக்கறைகெகாண்டு செயல்பட்டு வந்திருக்கிறது.

தனது வயிற்றுக்காக அதிக நேரத்தை செலவிட்டு உழைக்கும் பெருவாரியான மக்கள் கூட்டம், இங்கு இலக்கியம் என எழுதப்படும் பிரதிகளோடு உறவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களுக்கு நேரம்கூட இருப்பதில்லை. ஆகவே, சமரசம் என்பதோ, நல்லிணக்கம் என்பதோ எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை தடங்காட்டியிருக்கிறேன். அதற்கான பிரத்தியேகமான வழிமுறைகளை என்னால் பரிந்துரைக்க முடியாது. உலகளவில் எவ்வளவோ பெரும் கருத்தியல்கள் எல்லாம் தோற்றுப்போயிருக்கும் ஒரு இடம்தான் இந்த சமரசம் மற்றும் நல்லிணக்கம் போன்ற விசயம். ஆனால், தற்காலிகமான, குறித்த தேவைக்கான நல்லிணக்கத்தையோ, சமரசத்தையோதான் உருவாக்க முடியும்.

இலக்கியம் என்பது நிலவுகிற சூழலை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய சூழலையும் பிறப்பிக்கக்கூடியது. இரண்டுவகையான செயற்பாடுகளை செய்யும் பிரதிகளையும் இலக்கியம் என்றுதான் அழைக்கிறோம். ஆனால், முடிந்தளவு வன்முறை குறைந்த, நிலவுகிற சூழலை விமர்சிப்பதினூடாக ஒரு விழிப்புணர்வை உருவாக்குகின்ற இலக்கியப் பிரதிகளை இந்த தற்காலிகமான வேலையை செய்வதற்கு ஓரளவு பரிந்துரைக்கலாம். ஆனால், சூழலை தொந்தரவு செய்யக்கூடிய இலக்கியப் பிரதிகளை எழுதும் துணிச்சலான இலக்கியச் செயற்பாட்டாளர்கள் இங்கு இருக்கிறார்களா என்ன? இல்லையே.. அதனால்தான் தெளிவாகச் சொல்கிறேன். சமரசம் என்பதற்கு அப்பால், ஒவ்வொரு சமூகமும் தனது கலாச்சாரத்தையும், செயற்பாடுகளையும் கொண்டாடும் பிரதிகளை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. செய்துமிருக்கின்றன. எட்வேர்ட் செய்யட் சொல்வதைப்போல, தனது கலாச்டசாரத்தின் பெருமைகளை பேசி ஆரவாரஞ் செய்வதும், தனது கலாச்சாரம் செய்யும் தவறுகளை மறைப்பதும், பிற சமூகங்கள் அதே தவறுகளை தமது சமூகத்தை நோக்கி செய்யும் போது மூர்க்கமாக எதிர்ப்பது மட்டுமே புத்திஜீவியின் நேர்மையான செயலாக இருக்க முடியாது.

இதையே , நானும் பரிந்துரைக்க விரும்புகிறேன். மற்றைமையை Others தம்மிலும் கீழானவர்கள் என நோக்குதற்கு பதிலாக, வித்தியாசமானவர்கள். அப்படி இருக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என ஏற்றுக்கொள்ளும் புரிதல்களை உருவாக்கும் உரையாடல்கள் மிக அவசியமானவை.


கட்டுமரம் 4: இலங்கைத் தேசியத்தில் தமிழ்மொழிச் சமூகத்திற்கும் சிங்கள மொழிச் சமூகத்திற்கும் இருக்கிற, இருக்கவேணடிய பாதக, சாதக தொடர்புக் அல்லது பரிவர்த்தனைகள் பற்றி தீவிர இலக்கியச் செயற்பாட்டாளர் குரானாவின் மொழியை மையப்படுத்திய கருத்து என்ன?

றியாஸ் குரானா: தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான். அது இன்றியமையாத ஒன்று அல்ல. ஆனால் அதையே இங்கு அவசியமான நம்பிக்கையாக ஏற்கச் சொல்கிறது அதிகாரம். அதுதான் பிரச்சினையானது. தேசியம் என எடுத்துக்கொண்டால், பன்மையான தேசியங்களைக்கொண்டதுதான் இலங்கை என்ற நாடு. மலையகத் தமிழர்கள், முஸ்லிம் சமூகம், தமிழர்கள், சிங்களவர்கள் என பல சமூகங்கள் தங்களை ஒரு தேசியமாக உணரவும், அதை முன்வைக்கவும் உரித்துடையவர்கள்தான். அது குறித்த ஒரு சமூகம் தங்களை அரசியல்ரீதியலான பாதுகாப்பிற்கு இட்டுச்செல்ல உதவக்கூடிய ஒன்றுதான். அனைத்து கருத்துநிலைகளும், சட்டங்களும் மனிதர்களுக்கானதுதான். எனவே, மனிதர்களின் தேவைகளைப் பொறுத்து மாற்ககூடியதும் கூட. ஆனால், அதை மாற்றாமல் இறுக்குமான ஒன்றாக சமூகங்களின்மீது திணிக்கவே முடியாது. சிங்கள மொழிச்சமூகம் எப்படியும் அதிகாரத்தரப்பாக இருப்பதால், அவர்கள்தான் தங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றங்களையும், நெகிழ்ச்சிகளையும் கொண்டுவர வேண்டும். அவர்களிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருப்பதுதான் பாதகமானது. அது எப்போதும் பாதகமானதே. இதில் சாதகம் என்று ஒன்றுமே இல்லை. தமிழ் மொழிச்சமூகங்கள் சிங்கள அதிகார அரசுக்கு அடிபணிந்து போக வேண்டும். அல்லது எதிர்க்க வேண்டும். வேறு தேர்வுகள் இல்லை. ஆனால், சிங்கள சமூகத்திலும் சிறுசமூகங்களை ஏற்று உரையாடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை இனம்கண்டு உரையாடலை தொடருவதே முக்கியமான செயற்பாடாக இருக்கும்.

கட்டுமரம் 5: அச்சுப்பிரதிகளைக்கடந்து செல்லும் இலக்கிய முயற்சிகள் பற்றி உங்களுடைய அவதானிப்பும், அவற்றை உச்சநிலையில் பயன்படுத்த உங்களுடைய ஆலோசனைகளும் எப்படி ?

றியாஸ் குரானா: ஒரு மொழிக்கு லிபிகள் இருக்கும்வரை அச்சுப்பிரதிகள் இருக்கும். இணையமும், சமூக வலைத்தளங்களும் வந்தபிறகு ஏற்பட்ட ஒரு முக்கியமான விசயம் எனில், யாரும் தங்களுடைய கருத்தை, தங்களுக்கு தெரிந்தவகையில் முன்வைக்கலாம் என்பதுதான். அதை உண்மையில் பெரும் கொடையாகவே கருத வேண்டும். ஆனால், இந்த சுதந்திரம் என்பதை ஏற்றுக்கொள்வதென்பது, அவர்கள் முன்வைக்கின்ற கருத்தை ஏற்றுக்கொளவதாக எப்போதும் ஆகிவிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆக, எந்தவகையான இலக்கியச் செயற்பாடாக இருந்தாலும், அதற்கு பின்னால் பெரும் வாசிப்பும், புரிதல்களும் இருக்கின்றன எப்பதுதான் உண்மை. அப்படியான ஒரு வாசிப்புக்கு இந்த இணையம் இடம் ஏற்படுத்திதத் தந்திருக்கிறது என்பதையும் கொண்ணடாட வேண்டும்.
ஆனால், இங்கு நிகழ்வதென்ன? எழுதுவது மட்டுமே நிகழ்கிறது. வாசிப்பது நிகழவில்லை. இதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அச்சுக்கு வெளியே இணையம் அனைவரையும் தங்களின் கருத்துக்களை எழுதவும், முன்வைக்கவுமான சுதந்திர்தன்மையை தந்திருக்கிறது என்று மட்டுமே புரிந்துகொள்வதில்தான் பெரும் சிக்கலும் குறைபாடும் இருக்கிறது. அதனுடன் சேர்த்து, அச்சிலில் கிடைத்ததைவிட எல்லையற்ற அளவு அதிகமாக வாசிக்கும் வாய்ப்பையும் இணையம் தந்திருக்கிறது.

இந்த இரண்டு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்துவதைத்தான் நான் முக்கியமானது எனக் கருதுகிறேன். அதில், எழுதுவது என்பதை மட்டுமே தேர்வு செய்து செயற்படுத்துபவர்கள், வெறும் தேநீர்க்கடையில், ஒரு பீடிபுகைக்கும் நேரத்தில் அரட்டையடித்துவிட்டு சாதித்துவிட்டதாக கருதுபவர்கள் மட்டுமே.

கட்டுமரம் 6: தமிழ் இலக்கியப் புலத்தில் இன்றும் கடந்தகால ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியதான எழுத்துக்களை பெருமளவு வாசிக்க முடிகிறது. இது பல்லின சமூகங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா? இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

றியாஸ் குரானா: நீங்கள் கேட்க நினைப்பதை புரிந்துகொள்கிறேன். இந்தக் கேள்வியை இப்படியாக பார்;க்கலாமா? போராட்டத்தை மய்யப்படுத்தியதாகவே இன்னும் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பகுதிகள் இருக்கின்றன. அது ஏன்? என்பதை நீங்கள் கேட்க விரும்பியதாக இருந்தால், அதற்கானதே இந்தப் பதில். கடந்த அரை நுர்ற்றாண்டுக்கு மேலாக போரையும், அதன் அரசியலையும் மய்யப்படுத்தியதாகவே ஈழத்து இலக்கியம் இருக்கும்படி இங்கு இலக்கியவாதிகளாக இருந்தவர்கள் பாதுகாத்துவந்திருக்கிறார்கள். அதையே பொதுப்போக்காக மாற்றிவிட்டிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது போரும் அதன் அரசியல் செயற்பாடுகளையும் மாத்திரம் கொண்டதல்ல. அதற்கு அப்பாலும் வாழ்வின் பெரும்பகுதி இருக்கிறது என்பதுதான் உண்மை.

இங்கு இனமுரண்பாடுகளையும், விடுதலைக்கான போராட்டம் என்ற ஒரு விசயத்தையும் கையாண்ட நிறுவனங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள், தங்கள் தேவைக்கு ஏதுவாக, ஈழத்துச் சூழலை மாற்றியமைக்கவும், அதனூடாக, வாழ்க்கை என்றால் போராட்டத்தோடு தொடர்புடையது மாத்திரமே என்ற கதைகளைக்கட்டி பொதுமக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறது. அதை நம்பவைத்திருக்கிறது. ஆக, அவர்களின் நோக்கத்திற்காக இலக்கியத்தையும் பயன்படுத்தியது என்பதுதான் உண்மையே தவிர வேறு எதுவுமே இல்லை.

நமது தமிழ் இலக்கிய மரபும் ஏதோ ஒருவகையில், இதை அனுசரித்துப்போகக்கூடியதுதான். ஏனெனில், அரசர்களுக்கும், வசதிபடைத்தவர்களுக்கும் பாட்டுப்பாடி, அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்று வாழ்வதே சிறப்பானது எனக்க ருவந்தவர்கள்தானே. அதிகாரத்திற்கெதிரான குரலாக, அரசுக்கு எதிரான குரலாக செயற்பட்டதே இல்லை என்பதுதான் முக்கியமான ஒன்று.

ஈழத்தை பொறுத்தமட்டில், இலங்கை அரசுக்கு எதிரானதாக கருதி முதன்மைப்படுத்தப்பட்ட ஈழத்து இலக்கியம் என்பது, தமிழ் மொழிச்சமூகங்கள் மத்தியில் உருப்பெற்றிருந்த அதிகார அமைப்புக்களுக்கு சாய்வாகவும், அவர்களை மகிழ்விப்பதுமாகவே இருந்தது என்பதையும் எப்படி மறக்க முடியும். அந்த அதிகாரங்களுக்கு எதிராக செயற்பட்ட அதிக எழுத்தாளர்களும் கவிஞர்களும் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தருவதாக சொல்லிக்கொண்டு போராடிய ஆயுத அமைப்புக்ளாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். அதற்கு எதிரான குரல்களும் ஈழத்து இலக்கிய வெளியில் உருப்பெறாமலில்லை. ஆனால், அப்படி உருப்பெற்ற இலக்கியக்குரல்களை 'துரோகிகள்' என அடையாளப்படுத்தி எதிர்கொண்டதை நான் புதிதாகச் சொல்லத்தேவையுமில்லை.

விளிம்புநிலைச் சமூகங்களை அக்கறைகொள்வதைத்தான் நான் பரிந்துரைப்பேன். இந்த விளிம்புநிலைக் கதையாடல் என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தான் சார்ந்த இனத்தின் சமூகத்தின் பக்கம் மட்டும் நின்று நாங்கள் விளிநிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம், எங்களுக்கான உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாத்திரமே செயற்படுவதை நான் இந்த அர்த்தத்தில் பார்க்கவில்லை. அதை மிகவும் பின்தங்கியது. அது மோசமான ஒன்று.

விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கும் அனைத்து சமூககங்களையும், அச்சமூகங்களுக்குள்ளிருக்கும் நுண்ணளவிலான விளிம்புகள் பற்றியும் அக்கறைகொள்வதையே பரிந்துரைக்கிறென். அப்படி கவனிப்பதுதான், விளிம்புநிலைக் கதையாடல் என்பதாகும். அதுவே பன்மைத்தன்மை எனச் சொல்லும் இந்த விசயத்தை நெருங்கிவரக்கூடிய ஒன்று சரியா?

ஈழத்தைப் பொறுத்தமட்டில் இங்கிருக்கின்ற பொதுப்போக்காக இருக்கின்ற அனைத்து அம்சங்களும், இனவாதம், மற்றும், மொழிவாதம் சார்ந்தது மட்டுமே. அதற்கப்பால் இவர்கள் கடந்து செல்வதற்கு இன்னும் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அப்படி கடந்துசெல்வதற்கான உரையாடல்களும், புரிந்துகொள்ளுதலும் இல்லாதவரை பனமைத்தன்மை என்பதற்கு இங்கு எந்தவகையான முக்குpயத்துவமும், பெறுமானங்களும் இல்லை.

தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், தலித்கள், பெண்கள் என அனைத்து தரப்பையும் அக்கறைகொள்ளுவதும், அவர்களுக்கான அரசியல், இலக்கிய தனித்துவ்ஙகளை கருத்திற்கொள்வதையும்தான் நான் மேலே பேச முற்பட்டிருக்கிறேன்.


கட்டுமரம் 7: ஈழத்து சினிமாத்துறை இன்று கதைப்பாடல்கள் மற்றும் குறும்படங்கள் வடிவில் மீளழுச்சி பெற்று வருவதாக நம்பப்படுகிறது, இன்நிலை ஆரோக்கியம் பெற அல்லது ஈழத்து சினிமாத்துறை அடுத்தகட்டத்தை வெற்றிகரமாக அடைய இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என நினக்கின்றீர்கள்.

றியாஸ் குரானா: உண்மையில் இலக்கியத்தை இவைகளுக்கு பயன்படுத்த முடியமா என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஈழத்து இலக்கியம் தவிர ஏனைய கலைகளான சினமா, போன்றவை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. உலகளவில் கூட இலக்கியத்தை சினமாவில் பாவிப்பது என்பது மிகக் குறைவு. வெகுசன இலக்கியம் என்ற ஒருவகையில் கதைக்கப்படும் இலக்கியங்கள்தான் அனேகமாக சினமாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நவீன இலக்கியம் என கருதப்படும் எழுத்துவகைகள் சினமாவிற்கு உகந்தவைகளாக கருதும் அளவிற்கு சினமாவில் இருக்கும் செயற்பாட்டாளர்கள் வாசிப்புக்களோடு இல்லை என்பதுதான் பொதுவான நிலைப்பாடு.

தமிழ்நாட்டிலிருக்கும் சினமா பற்றிய புரிதல்களும், அந்தச் சினிமாப் பிரதிகளும்தான் இங்கு பாவனை செய்யப்படுகிறது. ஒன்றுமட்டும் சொல்ல வேண்டும். இலக்கியம், சினமா போன்றவை பன்மையான போக்குகளையும், கருத்துநிலைகளையும் கொண்டதுதான். அவைகளை புரிந்துகொள்ளும் வாசிப்புக்கள் இல்லாமல் எதுவும் இங்கு சாத்தியமே இல்லை. கண் கண்டால் கைசெய்யும் என்பதைப்போல:, ஒன்றைப் பார்த்து செய்பவர்களே இங்கு அதிகம். அதையே இவர்கள் விரும்புகிறார்கள். அவை தொடர்பான வாசிப்பு;களுக்கூடாக ஒரு துறையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று எந்த அக்கறையுமில்லை. அந்தளவு அக்கறையும், ஈடுபாடும் இல்லாதுபோனால், வெறுமனே பாவனை செய்பவர்களாகவே இங்கு பல கலைஞர்கள் உருவாகுவார்கள். கிரியேற்றர்கள் உருவாகவே மாட்டார்கள்.

கட்டுமரம் 8: தமிழ் சூழலில் முகநூல் பெருமளவு கவிஞர்களையும் எத்தாளர்களையும் புதிதாக தந்துள்ளது, ஆனால் அவர்களது வாசிப்பு பின்புலம், சிந்தனைத் தேர்ச்சி போன்றவை கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இது தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆரோக்கியமான விளைவுகளை தராது என நினைக்கிறேன். இதுபற்றிய உங்களுடைய புரிதல் மற்றும் கருத்து என்ன?

றியாஸ் குரானா: நீங்களே அதைப்பற்றி இந்தக் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். எல்லாத் துறைகளையும்போல், இலக்கியத்திலும் உபவிளைவுகள் இருக்கத்தான் செய்யும். அப்படியான உபவிளைவுகள் உருவாக வேண்டியிருப்பதை ஏற்கிறேன். ஆனால், அதன் செயற்பாடுகளையும், அதற்கான முக்கியத்தவத்தையும் ஏற்றுக்கொண்டதாக இதை பார்க்க வேண்டியதில்லை.
இசைக் குழுக்களைப்போன்றதுதான் அது. ஏற்கனவே, இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல்களை மேடைகளில் கச்சேரியாக நடத்துபவர்களும், அதை இசைக்கும் இசைக்கலைஞர்களும் இருப்பார்கள். அவர்களுக்கும், பெரும் கைதட்டல்களும், வரவேற்புகளும் இருக்கும். அவர்களும் கலைஞர்களாக பொது வெளியில் மதிக்கப்படுவார்கள். ஆனால், அந்தச் செயற்பாடு குறித்து நமக்குத் தெரியுமல்லவா?

அவர்கள் மிமிக்ரி கலைஞர்களைப்போன்றவர்கள்தான் அல்லவா?
ஆகவே, இதுதான் இந்த முகநூல் இலக்கியவாதிகளின் நிலைப்பாடும். நிலவரமும். ஆனால், இதிலும் சில முக்கியமான கவிஞர்களும், எழுத்தாளர்களும் உருவாகாமலில்லை. அப்படி உருவாகுவது என்பது, அவர்களின் வாசிப்பும், சிந்தனைமுறைளையும் சார்ந்தது. எங்கு செயல்படுகிறோம் என்பது இங்கு முக்கியமான விசயமல்ல. எப்படி செயற்படுகிறோம் என்பதுதான் முக்கியமானது. அதைப்பற்றியே நான் அக்கறை செலுத்துகிறேன்.

எழுத்துச் செயற்பாடு என்பது, மிகவும் கடின உழைப்பைக் கோரும் ஒன்று. அந்த உழைப்பைச் செலுத்தாவிட்டால், பைங்கிளிசாகித்தியம் போலவே இவர்களுடைய எழுத்துக்கள் அமைந்துவிடும்.

வாசிப்பதென்பது, புத்தகங்களின் எண்ணிக்கை சார்ந்தவிசயம்கூட அல்ல. கருத்துநிலைசார்ந்தது. கோட்பாடு சார்ந்தது. இவைகளைக்கண்டால் இல்லது கேள்விப்பட்டால், நமது ஈழத்து இலக்கியவாதிகளுக்கு டவுசருக்குள் மூத்திரம் போவதை நீங்கள் அறிவீர்கள்தானே... அப்படியானால், இவர்கள் எப்படி, இலக்கியத்தில் செயற்படப்போகிறார்கள். இந்த இசைக்குழுக்கள் செய்யும் வேலையைப்போல, மிமிக்கிரி கலைஞர்களாக இருப்பதைக் கடந்து இவர்களால் எதுவுமே செய்ய முடியாது போய்விடும். அப்படி இல்லாமல் கருத்தியல் சார்ந்தோ, கோட்பாடு சார்ந்தோ வாசிப்புக்களை செய்பவர்களையும், இலக்கியத்தில் இயங்குபவர்களையும், மொழியின் விரிந்த பரப்பில் மட்டுமல்ல அதைக்கடந்தும் பொருட்படுத்தி கவனப்படுத்து பேசவேண்டிய நிலை உருவாகும் என்பதுதான் உண்மை.

இலக்கியச் செயற்பாடு என்பதே, மற்றமைகளை அக்கறைகொள்வதும், வன்முறைகளை முடியுமானவரை இனம்கண்டு சொல்வதும், அதை பிரதிகளில் கொண்டுவராது அதற்கு மாற்றீடான பிரதிகளை உருவாக்குவதும்தான் மற்றப்படி எதுவுமில்லை.
கட்டுமரம் 9: இலங்கை பல்கலைக்கழகங்களின் இலக்கியப்பாடப்பரப்புக்களில் திருப்திகரமானதாகவுள்ளதா? அவற்றுடன் எதை எதை கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

றியாஸ் குரானா - இதற்கு பதில் சொல்வது கடினமானது. ஏனெனில், பக்கலைக்கழகத்தினுள் இலக்கியமென்பது பரீட்சைக்கு தயார் செய்யும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருக்கின்றன. அங்கிருப்பவர்கள் இலக்கியச் செயற்பாட்டாளர்களல்ல. கேள்விகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மட்டுமே. ஆக, மாணவர்கள் தாங்கள் குறித்த பாடத்தில் சித்தியடைய என்ன செய்யவேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதை அக்கறைகொள்பவர்கள் மட்டுமே. அதேநேரம், அங்கிருக்கின்ற பேராசிரியர்களும் தொழில்முறை சார்ந்தவர்கள்தான். அவர்களுக்கு இலக்கியம் கற்பிப்பதென்பது ஒரு தொழில். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணத்தை தருகிறது. ஆக, இதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவைகளைமட்டுமே செய்தால்போதும். இலக்கியங்களும், கருத்தியல்களும் தமிழ்ச்சூழலில் அறிமுகமானதும், விவாதிக்கப்பட்டதும் ' சிற்றிதழ்கள்' என்கின்ற பல்கலைக்கழக நிறுவனத்திற்கு வெளியே இருந்த இலக்கியம் சார் இதழ்களினூடாகத்தான்.
அந்த இதழ்களில் விவாதிக்கப்பட்டு ஓரளவு சூழலில் முக்கியமானதுதான் 'இது' என்ற நிலவரம் வரும்போது, இந்தப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அவைகளை தங்களின் பேசுபொருளாக எடுததுக்கொண்டு ஒரு ரவுண்ட் வரத்தொடங்குவார்கள்.
ஆனால், ஈழத்தில் இதுகூட சாத்தியமற்றிருப்பதும், கவனத்திற்கொள்ளாதிருப்பதும்தான் வேடிக்கையான ஒரு விசயம். அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் என 80 களுக்குப்பிறகு தமிழில் வந்த எந்த கலைஇலக்கியக்கோட்பாடுகளும் ஈழத்து பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக ஆக்கப்படவே இல்லை என நினைக்கிறென். அல்லது கவனிக்கப்படாமலே கிடக்கிறது என நினைக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு கேள்விகளுக்கான ஒரு சிறிய விளக்கமாகத்தான் இந்தக் கருத்தாக்கங்கள் படிப்பிக்கப்படுகின்றன என்றும் கருதுகிறென்.
யோசித்துப்பாருங்கள், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருக்கும் இந்தக் கருத்துநிலைகள், இன்னும் இலங்கைப் பல்கலைக்கழகங்களை வந்தடையவில்லை என்பது எதை உணர்த்துகின்றது. இலக்கியம் என்ற விசயத்தில் எவ்வளவு பின்தங்கி நிற்கிறார்கள் என்பதைத்தவிர வேறு என்னதான் இது உணர்த்துகிறது.
சிங்களமொழியில் இதற்கு மாற்றமான ஒரு நிலை இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால், தமிழ் மொழிப் பல்கலைக்கழகங்கள் பரிதாபத்திற்குரியன என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், இந்தக் கருத்துநிலைகளை பேசக்கூடிய விரிவுரையாளர்களும் குறைவு என்றே சொல்கிறார்கள். அனேகமாக, இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியரைவிட வேறுபட்டவரகளாக எனக்குத் தோன்றவே இல்லை.
இங்கிருக்கின்ற கல்விமுறைகூட அதற்கொரு காரணம் எனலாம். மாற்றுக்கல்வியை முன்வைத்து இயங்கிய பவ்லோ ஃப்ரைரே போன்றவர்கள், இந்தக் கல்விமுறையை 'வங்கிமுறை' க்கல்வி என அழைப்பார். அவரின் விடுதலைக்கான கல்வி என்ற கருத்துருவாக்கங்கள்கூட இங்கு கவனத்திற்கொள்ளப்படவேயில்லை என்று நினைக்கிறேன். ஆசிரியர் அனைத்தும் தெரிந்தவர், மாணவர்கள் கற்றுக்கொள்ளும் நிலையிலிருப்பவர்கள். பரீட்சைக்கான கேள்விகளுக்கு பதில்களை நினைவில் வைத்திருத்தல் அவ்வளவுதான்.
குறித்த கேள்விகளை எதிர்கொள்ளும் கால நேரத்திற்கும், அக்கேள்விகளுக்கு யார் யாருக்கெல்லாம் பதில்கள் நினைவுக்கு வருகிறதோ அவர்கள் 'கெட்டிக்காரர்கள்' அவ்வளவுதான். சில பல்கலைக்கழகங்களில், சமகால சிறுகதையாசிரியரென்றால், அது புதுமைப்பித்தன்தான். ஒரு நகைச்சுவைக்காக இப்படிச் சொல்கிறேன். இலக்கியத்தில் உலகளவில் நடைபெற்றிருக்கும், நடைபெற்றுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் மாணவர்களுக்கு தேவையில்லைய என நினைப்பது என்னவகையான மனநிலை? பாடத்திட்டம்? பழங்காலத்திலிருந்த, குரு சீடன் முறையான மரபான கல்விமுறையே இதைவிடச் சிறந்தது எனலாம்.

கட்டுமரம் 10: ஈழத்து போர்காலச் சூழலில் முஸ்லிங்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் இழப்புக்கள் பற்றிய பதிவுகள் இலக்கிய வடிவில் திருப்திகரமாகவுள்ளதா? அதுபற்றிய உங்களுடைய பார்வை என்ன?

றியாஸ் குரானா – பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனது வாசிப்பிற்குட்பட்ட வகையில் 40 மேற்பட்ட சிறுகதைகளும், 100க்கு மெற்பட்ட கவிதைகளும் இருக்கின்றன. அதுபோல:. மிகச் சில நாவல்களில் சிறியளவு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மூன்று நாவல்களை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டலாம். நாவல்களில் எழுதப்பட வேண்டும். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்தைப்போல, நாவல்கள் மற்றும் சிறுகதைகளிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. போரை அதன் நிகழ்வுகளை மய்யப்படுத்தி எழுதப்படும் நாவல்களை படித்தால், அங்கெ முஸ்லிம்கள் என்ற ஒரு சமூகம் இருந்திருக்கிறதா என்ற சந்தேகமே ஏற்படும். போர் நடைபெற்ற காலங்களில், முஸ்லிம்கள் வடக்கிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் போர்காலத்தை பேசும் நாவல்கள், தனக்குள் ஒரு முஸ்லிம்பாத்திரத்தைக்கூடு வைத்திருக்காது என்பதுதான் முக்கியமானது.

இது இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா? என்பதைப்போல, அரசியலிலும் கேட்க வாய்ப்புள்ளது. நிறையவே ஆவணங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. அது அரசியல் நிறுவனங்களால் நிகழ்ந்த ஒன்று அல்ல என்பதும் முக்கியமானது. இந்தப் போராட்ட காலத்தில், தமிழ் சமூகம், முஸ்லிம் சமூகம், மலையக சமூகம், தலித்கள், பெண்கள் என பாதிக்கப்பட்ட அனைத்து தரப்புகளும் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. முஸ்லிம்களின் பாதிப்புமட்டுமே பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதோடு எனக்கு உண்மையில் உடன்பாடு சிறிதுமில்லை.
அதற்கு அப்பாலும் ஒரு விசயமிருக்கிறது. பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால், இலக்கியப்பிரதிகளில்தான் பதிவுசெய்யப்பட வேண்டுமென்ற ஏதாவது கோரிக்கை இருக்குமானால் அதை மறுக்கிறேன். ஆயினும், ஒரு பிரதியை முன்வைத்து யாராவது பேசும்போது, இந்தப் பிரதி போராட்டகால அவலங்களை பேசுகிறது என யாராவது சொன்னால், உடனே குறுக்கிட்டு அதில், எந்தச் சமூகங்கள்விடுபட்டுள்ளன என்பதை சுட்டிக்டகாட்டுவேன். அப்டிச் சுட்டிக்காட்டுவதென்பதன் அர்த்தம் இதுதான்.

போராட்ட காலத்தை இந்த இலக்கியங்கள் பதிவுசெய்கிறது என்ற கூற்றைத்தான் நான் மறுக்கிறேன். அந்தக் கூற்று, பிறசமூகங்களுக்கு இந்தப் போராட்ட காலத்தில் எந்தவிதமான அவலங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது என்பதுதான் அதன் காரணம்.

வெள்ளி, ஜூன் 23, 2017

மஞ்சள் சூரியனில் பாதி

சிமமண்டா அடிச்சி

தமிழில் - கெ.பி. அனுஜா

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – ‘முதிர்ந்த கழுகின் இறகு எப்பொழுதுமே அப்பழுக்கற்று இருக்கும்’ என.

இன்று, மழைக்காலத்தின் நடுவில் சூரியன் ஆரஞ்சுக் கொழுந்தாய் என் உடலருகே தகிப்பது போன்றதொரு sv-ws-logo copyநாள்; இருந்தாலும், மழைப் பெய்து கொண்டிருந்தது; சிறுமியாய் இருந்தபோது இது போன்ற நாட்களில் நான் ஓடி விளையாடியது, சூரியனுக்கும் மழைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிப் பாட்டுக்கள் பாடி, அந்தப் போராட்டத்தில் சூரியனை வெற்றி பெறத் தூண்டியதை எல்லாம் நினைத்துக்கொண்டேன். வெதுவெதுப்பான மழைத்துளிகள் என் வியர்வையோடு கலந்து என் முகத்தின்மேல் ஓட, நான் ந்சுக்கா(Nsukka)வில் கூட்டம் நடந்து முடிந்தபின் என் விடுதியை நோக்கி நடந்தேன். ‘படுகொலைகளை நினைவுகூருங்கள்’ என்றெழுதிய போராட்ட அட்டையை இன்னும் வைத்துக் கொண்டு, என் – நமது – புதிய அடையாளத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தேன். மே மாதக் கடைசி, ஒஜுகு(Ojukwu) பிரிவினையை அப்போதுதான் அறிவித்திருந்தார் – எனவே நாங்கள் இனி நைஜீரியர்கள் இல்லை. நாங்கள் பியாஃப்ரர்கள்(Biafran).

விடுதலைச் சதுக்கத்தைச் சுற்றி கூட்டத்துக்காக நாங்கள் கூடியிருந்தபோது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்போ பாடல்களை உரக்கக் கத்தி, நதியைப் போல அசைந்தாடினோம். எங்கள் வளாகத்துக்கு வெளியே, சந்தையில் பெண்கள் ஆடிக் கொண்டே வேர்க்கடலைகளையும் மாம்பழங்களையும் இலவசமாய்க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று யாரோ சொன்னார். ந்நாம்டி(Nnamdi)யும் நானும் அருகருகே நின்று கொண்டு, எங்கள் தோள்கள் ஒன்றையொன்று தொட பசுமையான டோகோன்யரோ[i] மரக் கிளைகளையும் கெட்டித்தாளாலான பதாகைகளையும் கையாலசைத்தோம். ந்நாம்டியின் பதாகையில் ‘இப்பொழுதே பிரிவினை’ என்று இருந்தது. அவன் மாணவன் தலைவனாயிருந்தாலும், கூட்டத்திலும் என் அருகே இருப்பதையே நாடினான். மற்ற மாணவர் தலைவர்கள், கூட்டத்தின் முன்னணியில், ‘நைஜீரியா’ என்று வெள்ளைச்சுண்ணத்தால் எழுதப்பட்டிருந்த சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள். ஆழம் அதிகமில்லாத ஒரு குழியைத் தோண்டி, அந்த சவப்பெட்டியை புதைத்த போது, ஒரு பாராட்டொலி எழுந்து கூட்டத்தைச் சுற்றி அரவம் போல் ஒன்றாய் அணைத்து, எங்களைத் தூக்கி – ஒலியும் ஒன்றேயாய், நாங்களைனைவரும் ஒன்றேயாய் – ஒன்றாயாக்கியது.

நான் மகிழ்ச்சியுடன் உரக்கவே குரலெழுப்பினேன், இருந்தாலும் அந்தச் சவப்பெட்டி, என் அம்மாவின் தாய்க்குப்பிறந்த[ii] இஃபேகா(Ifeka) சித்தி – நான் பிறந்தபிறகு என் அம்மாவின் முலைப்பால் வற்றியபின், அவள் தான் எனக்கு, தன் முலைப்பாலைக் கொடுத்தவள் – என் சித்தியைத் தான் நினைவுபடுத்தியது. வடக்கில் நடந்த படுகொலைகளின் போது இஃபேகா சித்தி கொல்லப்பட்டாள். கருவுற்றிருந்த அவள் மகள் அரிஃஜே(Arize)வும் கூட கொல்லப்பட்டாள். அரிஃஜேவின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து தலை வெட்டியிருப்பார்கள் – ஏனென்றால் அப்படித்தான் கருவுற்ற பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்டார்கள். நான் இஃபேகா சித்தியையும் அரிஃஜேவையும் பற்றி மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று ந்நாம்டியிடம் சொல்லவில்லை. ந்நாம்டி தன் மூன்று மாமன்களையும் ஆறு ஒன்றுவிட்ட சகோதரங்களையும் இழந்திருந்த சமயத்தில், நான் இரண்டே உறவுகளை இழந்தது தான் நான் சொல்லாததற்குக் காரணம் இல்லை. ஆனால், ந்நாம்டி என் முகத்தை வருடி, ‘நான் ஏற்கனெவே சொன்னேனே, படுகொலைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிராதே. அதனால் தானே நாம் நாட்டைப் பிரித்தோம்? பியாஃப்ர பிறந்து விட்டது! படுகொலைகளுக்குப் பதிலாக, புதிய பியாஃப்ர பற்றியே நினை. நம் வலிகளை வைத்து வலிமை கொண்ட நாட்டை உருவாக்குவோம், நம் வலிகளை வைத்து நம் நாட்டை ஆப்பிரிக்காவின் பெருமையாக மாற்றுவோம்” என்பான்.

ந்நாம்டி அப்படித்தான்; சில சமயம் நான் அவனைப் பார்த்து – இருநூறு வருடங்களுக்கு முன் ஓர் இக்போ வீரனாக தன் சிற்றூரின் தலைவனாக போரில் (ஆனாலும் நேர்மையானதோர் போரில்), தீயில் சுட்ட அரிவாளோடு பாய்ந்து போய், குச்சிகளில் கட்டித் தொங்கப்பட்ட தலைகளோடு திரும்பி வருபவனாக – எப்படி இருந்திருப்பான் என்று கற்பனை செய்வேன்.

நான் என் விடுதிக்கு முன் வந்தபோது, மழை நின்றிருந்தது; சூரியன் மழையுடனான தன் போராட்டத்தில் வென்றிருந்தான். விடுதியின் முகப்பறையில், பெண்கள் கூட்டம் கூட்டமாய்ப் பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்து குழாயடியில் ஒருவரையொருவர் ப்ளாஸ்டிக் பக்கெட்களால் சண்டைபோட்டு அடித்துக் கொண்ட பெண்கள், மற்ற பெண்ணுடைய மார்க்கச்சை உலரப்போட்டிருந்தால் அதில் ஓட்டை போட்ட பெண்கள், இப்போது ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பாடினார்கள். அவர்கள் ‘நைஜீரியா, உன்னை வணங்குகிறோம்’ என்று பாடுவதற்குப் பதிலாக, ‘பியாஃப்ர, உன்னை வணங்குகிறோம்’ என்று பாடினார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து, பாடினேன், கைதட்டினேன், பேசினேன். படுகொலைகளைப் பற்றி நாங்கள் பேசவில்லை; வீடுவீடாக இக்போக்களைத் தேடி, மரங்களுக்குள் இக்போக்கள் பதுங்கியிருந்தாலும் அங்கிருந்து அவர்களை இழுத்து, ‘ஜிஹாத்‘ என்றும் ‘நையாமிரி, நையாமிரி” என்றும் கத்துகிற, பளபளக்கும் கண்களுடைய மக்களால் நடத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக, ஓஜுகு பற்றிப் பேசினோம்; ஓஜுகுடைய பேச்சுக்கள் எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது, புல்லரிக்க வைத்தது, அவரின் கவர்ச்சி மற்ற தலைவர்களையும் (ஓஜுகு அருகில் ந்குருமாஹ்-Nkurumah- ப்ளாஸ்டிக் பொம்மை போலிருந்தாராக்கும்!) மீறி ஒளிவிட்டது என்பதைப் பற்றியெல்லாம் பேசினோம். ‘இப்போ, ஒட்டுமொத்த கருப்பு ஆப்பிரிக்காவை விட பியாஃப்ரலயே ஜாஸ்தி மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் இருக்காங்க’ என்று யாரோ சொன்னார். ‘ஆ! பியாஃப்ர ஆப்பிரிக்காவையே காப்பாற்றும்’ என்று வேறு யாரோ சொன்னார். நாங்கள் சிரித்தோம், எங்களுக்கு எப்பொழுதுமே தெரிந்திருக்கவியலாத மக்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டோம்.

அதற்குப்பின் வந்த வாரங்களில் இன்னும் சிரித்தோம்-புலம்பெயர்ந்த எங்கள் பேச்சாளர்கள் தத்தம் பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்குத் திரும்பிய போதும் சிரித்தோம் – ஏனென்றால், நைஜீரியாவை ஒடுக்க எங்களுக்கு ஒரே வாரம் தான் வேண்டியதாயிருக்கும். நைஜீரிய கடற்படையின் கப்பல்கள் எங்கள் துறைமுகத்தை அடைத்து நிறுத்தப்பட்ட போதும் சிரித்தோம் – ஏனென்றால் இந்த அடைப்பு நீண்ட நாள் தாங்காது. க்மேலினா3[iii] மரங்களடியில் நாங்கள் கூடி, பியாஃப்ரவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றி உரையாடியபோதும் சிரித்தோம்; ‘நைஜீரியப் பல்கலைக்கழகம், ந்சுக்கா’ என்ற பலகையை எடுத்துவிட்டு ‘பியாஃப்ர பல்கலைக்கழகம், ந்சுக்கா’ என்ற பலகையை வைத்தபோதும் சிரித்தோம். ந்நாம்டி முதல் ஆணியை அடித்தான். பியாஃப்ரவின் இராணுவத்தில் முதல் ஆளாய் அவன் சேர்ந்த பிறகு, அவன் நண்பர்களும் சேர்ந்தார்கள். புதிய பெயின்ட் வாசம் குறையாத இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு, அவனது புதுச் சீருடையைப் பெறுவதற்காக அவனோடு போனேன். அந்தச் சீருடையில் அவன் பரந்த தோள்களுடையவன் போலவும், திறமையானாகவும் தோன்றவே, நான் அவன் சீருடையை எடுக்கவே விடவில்லை; அவன் என்னுள் கலந்த போதும், மொரமொரப்பான காக்கிச் சீருடையை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

என் வாழ்க்கை – எங்கள் வாழ்க்கை – ஒரு புத்தொளியைக் கண்டது. பதனிட்ட தோலின் பளபளப்பைப் போல. நாங்களெல்லாம் எங்கள் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, உருக்கிய எஃகு ஓடுகிறது என்று உணர்ந்தோம். தீக்குழியில் வெறுங்காலில் நடக்கும் சக்தி பெற்றது போல உணர்ந்தோம்.

என் விடுதி அறையிலிருந்து, துப்பாக்கிகளின் சத்தத்தைக் கேட்டேன். அது அருகில், விடுதி முகப்பறைக்குள்ளிருந்து இடி மேலே போவது போல கேட்டது. யாரோ ஒலிபெருக்கியில் கத்திக் கொண்டிருந்தார்கள். உடனே வெளியேறு! உடனே வெளியேறு! தாழ்வாரங்களில் பாதங்கள், அதுவும் அவசரமாய்ச் செல்லும் பாதங்களின் ஒலி கேட்டது. என் பொருள்களை ஒரு பெட்டியில் தூக்கிவைத்தேன் – என் உள்ளாடைகளை மறக்க இருந்தேன்! நான் விடுதியை விட்டு வெளியேறும் போது, ஒரு பெண்ணின் நளினமிகு செருப்பு ஒன்று படிகளில் கிடந்ததைப் பார்த்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – ‘பரங்கிக்காயின் தண்டுக்குள் நீர் எப்படி நுழைந்தது என்று யாரறிவார்கள்?’

half of yellow sun

ஏனுகு[iv]வின் காற்றில், மழையின், பசிய புல்லின், நம்பிக்கையின், புதிய எறும்புப்புற்றுகளின் மணம் இருந்தது. சந்தை வியாபாரிகளும், கிழவிகளும், சிறுவர்களும் ந்நாம்டியை அணைப்பதையும் அவனது இராணுவச் சீருடையை வருடியதையும் பார்த்தேன். ஓபி அதை ‘நேர்மையான வீரம்’ என்றான். ஓபி பதின்மூன்று வயதான, கண்ணாடி அணிந்த, ஒருநாளைக்கொரு புத்தகம் படிக்கும், ‘மேதைமைநிறை சிறுவர்களுக்கான முதுநிலைப் பள்ளி’யில் படிக்கிற, கிரேக்க நாகரிகத்தின் ஆப்பிரிக்கப் பிறப்பு பற்றி ஆராய்கிற, என் தம்பி. ந்நாம்டியின் சீருடையைத் தொட மட்டுமல்லாமல், அதைப் போட்டுப் பார்க்கவும், அதுவும் துப்பாக்கிகளின் உண்மையான சத்தத்தைக் கேட்டுப் பார்க்கவும் கூட விரும்பினான். அம்மா ந்நாம்டியை வீட்டுக்கு வரச் சொல்லி, மாம்பழ இனிப்புப் பணியாரம்[v] செய்து கொடுத்தார். “செல்லம், உன் சீருடை பகட்டாயிருக்குப்பா” என்று விட்டு, தன் மகனருகிலிருப்பது போலவே சுற்றிச் சுற்றி வந்தார். ஓராண்டுக்கு முன்னால் நானும் ந்நாம்டியும் திருமணநிச்சயம் செய்த போது எனக்கு ‘இன்னும் வயதாகவில்லை’, அவன் குடும்பம் நமக்கு ‘ஏற்றாற்போலில்லை’ என்றெல்லாம் முணுமுணுத்தது அவளில்லை போல!

அப்பாவோ, நானும் ந்நாம்டியும் உடனேயே திருமணம் செய்து கொண்டால், ந்நாம்டி தன் சீருடையை திருமணத்தின் போது அணியலாம்; எங்களின் முதல் மகனுக்கு ‘பியாஃப்ரஸ்’ என்று பெயர் வைக்கலாமென்றெல்லாம் யோசனை சொன்னார். அவர் பகடி தான் செய்தாரென்றாலும், ந்நாம்டி இராணுவத்தில் சேர்ந்ததால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்ததென்னவோ உண்மை. மெருகேற்றப்பட்ட சீமைநூக்கு[vi] மேசையின் வண்ணத்தில், அவனைப் போலவே தோல்நிறமுள்ள ஒரு பிள்ளை. ந்நாம்டியிடம் இதை நான் சொன்னதும், என் உள்ளே எங்கேயோ ஆழத்தில் இருக்கும் ஏக்கத்தைப் பற்றி நான் சொன்னதும், அவன் தன் கட்டைவிரலைக் குத்தி, என் கட்டை விரலையும் குத்தி – அவன் ஒன்றும் குருட்டுநம்பிக்கையாளனில்லை – எங்களிருவரின் ரத்தத்தையும் சேர்த்து பூசிக்கொண்டோம். அந்த நாசமாகப் போகிற நம்பிக்கைக்கு என்ன அர்த்தம் என்று எங்களுக்கே தெரியாததால் சிரித்துக் கொண்டோம்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு, சிங்கத்தைப் படைப்பவன் சிங்கத்தைப் புல்லுண்ண விடுவதில்லை என.

ந்நாம்டி போவதைப் பார்த்தேன், அவன் காலணித் தடங்களைச் செம்மண்தூசி மூடுவது வரை, என் பெருமையின் ஈரத்தை என் தோல்மேல், என் கண்களில் உணர்வது வரை. அவனுடைய மிடுக்கான ஆலிவ் வண்ணச் சீருடையின் கைப்பகுதியில் சூரியனின் பிம்பம் பாதி எழுந்து கொண்டிருந்ததில் ஒரு பெருமை. அதே சின்னம் தான் – மஞ்சள் சூரியனின் ஒரு பாதி – அப்பா போர் ஆராய்ச்சி இயக்ககத்தில் தன் புதிய பணிக்காகப் போகும் போது தினம் கட்டிச் செல்லும் பகட்டான பருத்தி ‘டை’யில் தைத்திருந்த சின்னம். அப்பா தனது மற்ற எல்லா பட்டு டைகளையும், சின்னமில்லாத டைகளையும் புறக்கணித்திருந்தார். அமெரிக்கையான நேர்த்தியான நகங்களையுடைய அம்மா, லண்டனில் வாங்கப்பட்ட தன் சில ஆடைகளை விற்று, செயின்ட் பால்(சர்ச்)இல் இராணுவவீரர்களுக்காக ஆடைகள் தைக்க ஒரு பெண்கள் குழுவைத் தொடங்கியிருந்தார். நானும் அந்தக் குழுவில் சேர்ந்தேன்; உள்சட்டைகளைத் தைத்து, இக்போ பாடல்களைப் பாடினோம். அதற்குப் பின், அம்மாவும் நானும் வீட்டுக்கு நடந்து வந்து (பெட்ரோல் செலவைக் குறைப்பதற்காக நாங்கள் வண்டியோட்டுவதைத் தவிர்த்தோம்) அப்பாவும் அந்த மந்தமான மாதங்களில் வீட்டுக்கு மாலைகளில் வருவார்; நாங்கள் வராந்தாவில் அமர்ந்து அநாரா[vii]வை வேர்க்கடலைச் சாந்தோடு தின்று கொண்டே, பியாஃப்ர வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, மண்ணெண்ணெய் விளக்கு மஞ்சள் நிழல்களைச் சுற்றியடிக்கும். பியாஃப்ர வானொலி, வெற்றிகளின் கதைகளை, நைஜீரியப் பிணங்கள் வரிசைகளாய் சாலைகளில் கிடக்கும் கதைகளை, கொண்டு வந்தது. இன்னும், போர் ஆராய்ச்சி இயக்ககத்திலிருந்து அப்பா எம் மக்களின் மதிநுட்பம் பற்றிய கதைகளைக் கொண்டு வந்தார்; ‘தேங்காய் எண்ணெயிலிருந்து பிரேக்குக்கான திரவத்தைச் செய்திருந்தோம், குப்பை உலோகங்களிலிருந்து கார் எஞ்சினைத் தயாரித்திருந்தோம், கச்சா எண்ணெயை சமையல் பாண்டங்கள் கொண்டே தூய்மைப் படுத்தினோம், வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட கண்ணிவெடியைச் சீர்படுத்தினோம்’. இந்த அடைப்பு எங்களைத் தடுக்க இயலாது. அடிக்கடி அந்த மாலைவேளைகளில் “எங்கள் குறிக்கோள் நியாயமானது” என்று எங்களுக்கே என்னவோ ஏற்கனவே தெரியாத மாதிரி சொல்லிக் கொள்வோம். ஓபி அதைத் தேவையான உறுதிமொழி என்று சொல்லுவான்.

அப்படிப்பட்ட ஒரு மாலையில் தான், ஒரு நண்பர் வீட்டுக்கு வந்து ந்நாம்டியின் படை பெனினை வென்றதாகவும், ந்நாம்டி நன்றாக இருப்பதாகவும் சொன்னார். நாங்கள் ந்நாம்டியை பனை மது கொண்டு பாராட்டினோம். “எங்கள் எதிர்கால மாப்பிள்ளைக்கு” என்று அப்பா தன் கோப்பையை என்னைநோக்கி நீட்டிச் சொன்னார். அப்பா, ஓபிக்கு எவ்வளவு வேண்டுமோ குடிக்க விட்டுவிட்டார். அப்பாவுக்கு கோனியாக்(Cognac) தான் பிடிக்கும், ஆனால் கருப்புச் சந்தையில் ரெமி மார்ட்டின் கூட இந்த அடைப்பினால் கிடைக்கவில்லை. சில கோப்பைகள் குடித்தபின், அப்பா, தன் மேலுதட்டில் வெள்ளை நுரைபடிய, இப்போது பனை மது தான் மிகவே பிடித்திருக்கிறது – அதை ஸ்நிஃப்டர்[viii] கோப்பையில் அருந்தாத வரை என்றார். நாங்கள் எல்லாரும் மிகவே உரக்கச்சிரித்தோம்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – நிலத்தில் நடக்கும் அணில் சிலசமயம் துள்ளியோடும், ஓட வேண்டிய தேவை வந்தால்.

ஏனுகு, ஹார்மட்டான்[ix] பருவக்காற்றுக் காலத்தின் நடுவில், தூசியும் காகிதத்துண்டுகளும் காய்ந்த இலைகளையும் கொண்டு வந்த காற்று – தலைமுடியையும் ஆடைகளையும் பழுப்பு நிறப் படலத்தில் படர விட்ட காற்று – கடுமையாக காற்றடிக்கும் ஒரு நாளில், வீழ்ந்தது. நானும் அம்மாவும் மிளகுசூப்[x] செய்து கொண்டிருந்தோம் – நான் பசுவயிற்றை நறுக்கி வைக்க, அம்மா மிளகை அரைத்துக் கொண்டிருக்க – நாங்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டோம். நான் முதலில் அது இடி, ஹார்மட்டான் புயலுக்கு முன் வரும் இடி என்றே நினைத்தேன். அது ஐக்கிய அரசின் துப்பாக்கிகளாக இருக்க முடியாது, ஏனெனில் பியாஃப்ர வானொலி, ஐக்கியப் படை துரத்தியடிக்கப்பட்டதால் அந்தப் படை மிக தூரத்தில் இருக்கும் என்றல்லவா சொன்னது. ஆனால், அப்பா சமையலறைக்குள் சில விநாடிகளுக்குள் தன் பருத்தி டை கோணலாயிருக்க வந்தார். “எல்லாரும் காரிலேறுங்க” என்றார் அவர். “இப்பவே! எங்க இயக்ககம் முழுக்க காலி செய்யுறாங்க”.

biafra war 2எதை எடுத்துப் போவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அம்மா தன் நகத் திருத்தப் பெட்டி, சின்ன வானொலி, உடைகள், பாதி கொதித்த மிளகு சூப்பை ஒரு கைத்துணியில் சுற்றியதை என்று எடுத்துக் கொண்டாள். நான் பிஸ்கோத்து பாக்கெட் ஒன்றை எடுத்தேன். ஓபி உணவு மேசையின் மேலிருந்த தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டான். அப்பாவின் புஃஜா (Peugeot) காரில் நாங்கள் கிளம்பும் போது, ஏனுகுவை எங்கள் படை திரும்ப வென்றவுடன் நாங்கள் விரைவில் திரும்புவோம் என்று அம்மா சொன்னார். அம்மாவின் அழகான பீங்கான் பண்டங்களை விட்டு, எங்கள் ஒலிப்பெட்டி, அம்மா புதியதாய் பாரிசிலிருந்து வரவழைத்த – அபூர்வமான மென்நீலப் பெட்டியில் வந்த – பொய்முடி இவற்றையெல்லாம் விட்டு விட்டுச் செல்வது அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை என்பது போலச் சொன்னார். ஓபி “மிருகத்தோல் அட்டை போட்ட என் புத்தகங்களையும்” என்று சொன்னான். பியாஃப்ரவின் படைவீரர்கள் பின்வாங்கிச் சென்றதை நாங்கள் பார்த்தாலும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல் இருந்ததே எனக்குப் போதுமானதாக இருந்தது. ந்நாம்டியை நான் அப்படி, பெருமழையில் நனைந்தோடும் கோழிக்குஞ்சைப் போல, கற்பனை கூடச் செய்து பார்க்க விரும்பவில்லை. அப்பா அடிக்கடி காரை நிறுத்தி முன்கண்ணாடியிலிருந்த அழுக்கைத் துடைத்ததால் மெதுவாகப் போவதுபோல் இருந்தாலும், கூட்டத்தின் காரணமாக அவரால் காரை மெதுவாகத் தான் ஓட்ட முடிந்தது. பெண்கள் சிறுகுழந்தைகளை முதுகில் கட்டி, சிறுவர்களை இழுத்துக் கொண்டே, பாத்திரங்களைத் தலைகளில் தூக்கி நடந்தார்கள். ஆண்கள் ஆடுகளையும் சைக்கிள்களையும் இழுத்துக் கொண்டு, மரப் பெட்டிகளையும் வள்ளிக்கிழங்குகளையும் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். குழந்தைகள், அத்தனை குழந்தைகள். தெளிவில்லா பழுப்புப் படலமாக தூசி எல்லாவற்றையும் சுழற்றி அடித்தது. தூசிப் படலம் கொண்ட நம்பிக்கையை, ஆடையாய் அணிந்த ஒரு வெளியேற்றம். இந்த மக்களைப் போல நாங்களும் இப்போது அகதிகள் என்று புரிய எனக்கு சிறிது நேரமாயிற்று.

இக்போ இனத்தவர்கள் சொல்வதுண்டு – ஒருவன் காலையில் எழுந்து கொள்ளுமிடமே அவன் வீடாகும்.

அப்பாவின் பழைய நண்பர் அகுபூசி(Akubeuze), ஒரு வருத்தமான புன்னகையோடு ‘கடவுள் பியாஃப்ரவை ஆசிர்வதிக்கட்டும்’ என்பவர். அவர் படுகொலைகளில் தன் அனைத்து மக்களையும் இழந்தவர். புகையில் கருத்த சமையலறையையும், குழிக் கழிவறை, கறைபடிந்த சுவர்களுடைய அறை இவற்றை அவர் காட்டியபோது, எனக்கு அழுகையாக வந்தது. அகுபூசியிடமிருந்து நாங்கள் வாடகை எடுக்கும் அறைக்காக நான் அழவில்லை, ஆனால் அகுபூசிக்காக அழுதேன். அவர் கண்களில் தெரிந்த மன்னிப்புக் கேட்கும் தோரணைக்காக. எங்கள் படுக்கும் பாய்களை அறையோரத்தில், எங்கள் பை மற்றும் உணவுக்கு பக்கத்தில் வைத்தேன். ஆனால், வானொலி அறையின் நடுவிலிருந்தது, அதைச் சுற்றி நடந்தோம், அதைக் கேட்டோம், அதைச் சுத்தம் செய்தோம். படைவீரர்களின் இராணுவப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ‘நாங்கள் பியாஃப்ரன்கள், வாழ்வாதாரத்துக்காகப் போராடுகிறோம், ஏசுவின் பெயரால், நாங்கள் வென்றிடுவோம், ஹிப் ஹாப், ஒன்று இரண்டு’. சில சமயம் வாயிற்பக்கம் இருந்த எங்கள் புதிய அண்டை வீட்டுக்காரர்களான மக்கள் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். பளிங்கு மாடிப்படிகளும் காற்றோட்டமான வராந்தாவுமான எங்கள் பழைய வீடு என்ன ஆயிற்று என்று நாங்கள் வாய்விட்டு புலம்பிவிடாமல் இருப்பதற்காக, பாட்டுக்களைப் பாடினோம். ஈனுகு வீழ்ந்து விட்டது, போர் ஆராய்ச்சி மையம் இப்போது சம்பளம் கொடுக்கவில்லை, அகவிலைப்படியைத் தான் அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றிப் பேசாமல் இருக்க, பாட்டுக்களைப் பாடினோம். அப்பா ஒவ்வொரு தாளையும், அப்பாவின் பெயர், அடையாள எண் பொறித்த, மை ஈஷிய தாளைக் கூட அம்மாவிடம் கொடுப்பார். நான் அந்தப் பணத்தைப் பார்த்து, பியாஃப்ரன் வெள்ளிகள் எப்படி நைஜீரிய வெள்ளிகளை விட அழகாய் இருக்கிறது, பியாஃபர பணத் தாளில் எழுத்தும் அமைப்பும் என்ன கம்பீரமாய் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சந்தையில் வாங்க முடிந்தது கொஞ்சம் தான்.

சந்தை ஓரளவே பொருள்களுடைய, தூசுடைய மேசைகளுடன் இருந்தது. உணவை விட நிறைய ஈக்களே இருந்தன, அதுவும் சாம்பற் நிறத்து இறைச்சியின் மேலும் கருப்புப்புள்ளிகள் நிறைந்த வாழைப்பழங்களின் மேலும் ஈக்கள் அப்பிக் கொண்டு பறக்கும். ஈக்கள் அந்த இறைச்சி மற்றும் பழங்களை விட ஆரோக்கியமாகவும் பசுமையானதாகவும் இருந்தன. நான் எல்லாவற்றையும் பார்வையிடுவேன், அது அமைதிக்காலத்துச் சந்தை போலவும், அங்கே தேர்வு செய்து வாங்க நான் காலாற வந்தாற் போலவும். இறுதியில் நான் மரச்சீனிக் கிழங்கைத்தான் எப்போதுமே வாங்குவேன், அது வயிற்றை நிரப்பும் என்பதாலும் அது தான் விலைகுறைந்திருப்பதாலும். அழுதுவடியும் கிழங்குகள், அதுவும் அச்சுறுத்தும் ரோசாநிறத் தோலோடு. நாங்கள் அதை இதற்குமுன் சாப்பிட்டதே இல்லை. நான் அம்மாவிடம் சொன்னேன், பாதி விளையாட்டாகத் தான், இந்தக் கிழங்குகள் விஷத்தன்மையானவை என்று. அம்மா அதற்குச் சிரித்தபின் சொன்னாள், ‘மக்கள் இதன் தோலியைக் கூடச் சாப்பிடுகிறார்கள், தேனே. முன்னெல்லாம் ஆடுகள் மட்டுமே சாப்பிடும்’.

மாதங்கள் மெல்ல நகர்ந்தன, என் மாதவிடாய் நேரங்கள் வந்தபோது குறைவாகவும், சிவப்புக் குறைந்து பழுப்பாகவும் வந்ததைக் கவனித்தேன். ந்நாம்டியைப் பற்றிக் கவலையாக இருந்தது. அவன் எப்படி எங்களைக் கண்டறிவான், அவனுக்கு ஏதேனும் ஆகியிருந்தால், என்னிருப்பிடம் சொல்ல யாருமேயில்லை என்றெல்லாம் கவலையாக இருந்தது. பியாஃப்ர வானொலிச் செய்திகளைக் கவனமாகக் கேட்டேன். நைஜீரிய வானொலி சில சமயங்களில் பியாஃப்ர வானொலி அலையெண் வரிசையை இடைமறித்து ஒலிபரபினாலும். ஓபி அதை ‘வேணும்னே ஜாம் பண்றாங்க’ என்பான். பியாஃப்ர வானொலி நைஜர் ஆற்றில் மிதந்த ஐக்கியப் படையினரின் ஆயிரக்கணக்கான் உடல்களை வருணித்தது. நைஜீரியா வானொலி ஆயிரக்கணக்காக இறந்து போன பியாஃப்ர வீரர்களையும், தோற்றோடும் பியாஃப்ர வீரர்களையும் பட்டியலிட்டது. நான் இரண்டையும் ஒரே கவனத்தோடு கேட்டேன், பிறகு என் கற்பனையில் எனக்குத் தோன்றியவற்றை உண்மையென்று கருதிக் கொண்டேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – பாம்பு தன் விஷத்தைக் காட்டும் வரை, குழந்தைகள் பாம்பை விறகுகளைக் கட்டுவதற்குத்தான் பயன்படுத்துவார்கள்.

ந்நாம்டி எங்கள் வீட்டு வாயிலில், வறண்ட காற்றடித்த ஒரு காலையில், கண்ணுக்கு மேல் ஒரு வடுவோடு, முகத்தில் தோல் நைந்து இழுபட்டு, அவன் கிழிந்த கால்சட்டை இடுப்பில் தங்காமல், வந்து நின்றான். அம்மா உடனே சந்தைக்கு விரைந்து மூன்று கோழி கழுத்தும் இரண்டு இறக்கையுமாக வாங்கி வந்து, கொஞ்சம் பாமாயிலில் வறுத்து வைத்தாள். “ந்நாம்டிக்காக,” என்று களிப்பான குரலில் சொன்னாள். ஃப்ரென்ச் சிக்கன் உண ( coq au vin) வை சமையல் குறிப்புப் புத்தகம் கூடப் பார்க்காமல் செய்யக்கூடிய அதே அம்மா!

biafra war 3நான் ந்நாம்டியை பக்கத்தில் இருக்கும் ஒரு அறுவடைக் காலம் வருமுன்னேயே அறுவடை செய்யப்ப்பட்ட பண்ணைக்குக் கூட்டிச் சென்றேன். எல்லாப் பண்ணைகளுமே அப்படித்தான் இருந்தன, இரவில் சூறையாடப்பட்டு, சோளக் கருது முதிருமுன்னரே சூறையாடப்பட்டதால், சோள முத்துகள் இன்னும் தோன்றாத சோளமும், என் கைமுஷ்டி அளவுக்குக் கூட இல்லாமல் இளசாக இருந்த குச்சிக் கிழங்கும் கொண்ட பண்ணை. ஓபி அதை ‘வெறி பிடித்த அறுவடை’ என்று சொன்னான். ந்நாம்டி என்னை ஒரு உக்பக[xi] மரத்தடியில் தரைக்கு இழுத்தான். அவன் உடல் தோலில் குத்திய எலும்புகளை என்னால் உணர முடிந்தது. என் முதுகைச் சிராய்த்து, என் வியர்த்த கழுத்தை கடித்து, என்னை தரையில் கிடத்திப்பிடித்த பிடியில் மணல் என் தோலைக் குத்தியதை உணர்ந்தேன். அவன் அத்தனை நேரம், அத்தனை இறுக்கமாக என்னுள் இருந்த போது, எங்கள் இருவர் இதயமும் ஒருசேர ஒரே லயத்தில் அடித்ததாக உணர்ந்தேன். இந்தப் போர் மட்டும் முடியாதிருந்தால், இது இதே தரத்தில் ஜாதிக்காய் போல விறுவிறுப்பாகவும் நீடித்தும் இருக்காதா என்று அபத்தமாகத் தோன்றியது. பின்னர், ந்நாம்டி அழத் தொடங்கினான். அவன் அழக்கூடியவன் என்று எனக்குத் தோன்றியதேயில்லை. பிரிட்டானியர்கள் நைஜீரியாவுக்கு இன்னும் ஆயுதங்கள் கொடுப்பதாகவும், நைஜீரியா ரஷ்ய விமானங்களையும் எகிப்திய விமானிகளையும் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கர்கள் எமக்கு உதவி செய்ய விரும்பாததாகவும், எம் தடையடைப்பு தொடர்வதாகவும், ந்நாம்டியின் படைப்பிரிவில் இரண்டே பேர் ஒரே ஒரு துப்பாக்கியுடன் மட்டும் உயிர்தப்பித்ததாகவும், இன்னும் சில படைப்பிரிவுகள் அரிவாள்களையும் குறுவாள்களையும் பயன்படுத்த நேர்ந்ததாகவும் சொன்னான். அவன் கேட்டான், ‘வடக்கே, இக்போவாக பிறந்ததற்கே குழந்தைகளைக் கொன்றார்கள், இல்லையா?’.

நான் என் முகத்தை அவன் முகத்தோடு அழுத்தினேன், ஆனால் அவன் அழுவதை நிறுத்துவதாயில்லை. ‘கடவுள் என்று ஒன்று இருக்கிறதா?’ என்று என்னிடம் கேட்டான். ‘கடவுள் என்று ஒன்று இருக்கிறதா?’ நான் அவனை இறுக்கி அணைத்து அவன் அழுவதையும், சிள்வண்டுகளின் ரீங்காரத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு நாள்களுக்குப் பின் பிரியாவிடை சொல்லிக் கிளம்பும் போது அவன் என்னை வெகு நேரம் அணைத்திருந்தான். அம்மா அவனுக்கு ஒரு பையில் சமைத்த சாதத்தைக் கொடுத்தனுப்பியிருந்தாள்.

நான் அந்த நினைவைச் சேமித்தேன், ஏன் ந்நாம்டியின் ஒவ்வொரு நினைவையுமே சேமித்து வைத்திருந்தேன், ஒன்றையும் செலவழிக்காமல் சிக்கனமாய். விமானத்தாக்குகள் நடக்கும் போது தான் அவற்றை நினைவுகொள்வேன், அதுவும் க-க-க என்ற விமானம்சுடும் துப்பாக்கிகள் கிறீச்சிட ஒரு கொதிக்கிற பகலில் எல்லாரும் பதுங்குபள்ளத்துக்கு ஓடினோம்-பதுங்குபள்ளம் என்பது தரையில் ஓர் அறையினளவு தோண்டப்பட்ட, மரத்துண்டுகளால் மூடப்பட்ட குழி-அதற்குள் சில்லிட்ட மண்ணில் சறுக்கிவிழுந்தோம். [அப்படிச் சறுக்குவதை] ஓபி ‘பரவசம்’ என்று சொன்னான், அவனுக்கு கீறல்களும் காயங்களும் பட்டாலும். நான் கரிமச் சுவர்களிலிருந்தும் மண்ணிலிருந்தும் இப்போதுதான் உழப்பட்ட நிலத்தைப் போல வந்த வாசனையை முகர்ந்து கொண்டு, குண்டடிப்பு முடியும் வரை சுற்றிலும் சிள்வண்டுகளையும் மண்புழுக்களையும் தேடி ஊர்ந்து கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த மண்ணை என் விரல்களுக்கிடையில் தேய்த்து ந்நாம்டியின் பற்கள், நாக்கு, குரல் என்று ஒவ்வொன்றாய் நினைவில்கொண்டு ரசிப்பேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – காது கேளாதவரை வணங்குவோம், ஏனென்றால் சொர்க்கங்களே கேட்காத போது பூமி கேட்கத் தொடங்கும்.

பல பொருள்களும் நிலையற்றுப் போய் விட்டன, மதிப்பற்றும். சோளமாவுணவை ஒரு தட்டில் இட்டுச் மெல்ல ரசித்துச் சாப்பிட்டேன். உணவு துணியைப் போல இருந்தாலும், பதுங்கு குழிக்கு ஓட வேண்டியிருக்கலாம் என்பதாலும், குழியிலிருந்து நான் வெளியே வருவதற்குள் அண்டை வீட்டார் யாரேனும் அதைச் சாப்பிட்டிருக்கக் கூடும் என்பதாலும், அல்லது அதை குழந்தைகளில் யாருக்கேனும் கொடுத்திருக்கக் கூடும் என்பதாலும் அதை ரசித்துச் சாப்பிட்டேன்.

அந்தக் குழந்தைகளில் பலரும் வெளிமுற்றத்தில் பள்ளிகளைத் துரத்தி ஓடிக் கொண்டிருப்பதால், ஓபி நாங்கள் அந்தக் குழந்தைகளுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம் என்று யோசனை சொன்னான். “குண்டடிப்பு எல்லாம் இயல்பான வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க” தலையை இட வலமாக ஆட்டிக் கொண்டே சொன்னான். கோலாப் பருப்பு மரத்தினடியில் ஒரு சில்லென்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தான். நான் சிமென்ட்டு பாளங்களின் மேல் பலகைகளை இட்டு பெஞ்சி ஆக்கி, மரத்தின் மேல் மரத்தாள் ஒன்றை கருப்புப் பலகை போல கட்டினேன். நான் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன், ஓபி கணக்கும் வரலாறும் கற்றுக் கொடுத்தான், குழந்தைகள் என் வகுப்பில் செய்தாற் போல அவன் வகுப்பில் கிசுகிசுக்கவோ இளிக்கவோ இல்லை. அவன் பேசவும் கைகளையாட்டவும் அந்த மரப்பலகையில் கரிக்கட்டியால் எழுதவும் செய்த போது என்னவோ அவன் அவர்களை கட்டிப் போட்டாற் போல இருந்தது (அவன் தன் வேர்த்து விட்ட முகத்தில் கைகளால் துடைத்த போது, அவன் முகத்தில் ஒரு கரிக் கோலம் போட்டாற் போல இருக்கும்).

அவன் படிப்போடு விளையாட்டையும் கலந்து கொடுத்ததால் அந்தக் குழந்தைகள் அப்படி இருந்தார்களோ என்னவோ – ஒரு முறை அவன் குழந்தைகளிடம் ‘பெர்லின் கருத்தரங்கை’ நாடகமாக்கச் சொன்னான். குழந்தைகள், ஆப்பிரிக்காவைப் பிரிக்கும் ஐரோப்பியர்களாக, மலைகளையும் ஆறுகளையும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியாவிட்டாலும் ஒருவர் மற்றவருக்கு மலைகளையும் ஆறுகளையும் கொடுத்தனர். ஓபி பிஸ்மார்க்காக நடித்தான். “இளம் பியாஃப்ரன்களுக்கு, நாளைய தலைவர்களுக்கு என் சிறு பங்களிப்பு” என்று குறும்பு பொங்க அவன் சொன்னான்.

நான் சிரித்தேன், ஏனென்றால் அவனும் நாளைய பியாகப்ர தலைவன் என்பதை அவன் மறந்து போவது போலிருந்ததால். நான் கூட சமயத்தில் அவன் எவ்வளவு சிறியவன் என்பதை மறந்து விடுவேன். “உனக்கு நினைவிருக்கா, நான் சில சமயம் மாட்டிறைச்சியை உனக்குக் கடிக்கச் சுலபமாயிருக்கும்னுட்டு கொஞ்சம் போல் கடித்து உன் வாயில் வைப்பேன்…?” என்று கேலி செய்தேன். ஓபி முகம் மாறி, அவனுக்கு நினைவில்லை என்று சொன்னான்.

வகுப்புகள் காலையில், சூரியனின் பகல் நேரக் கதிர்கள் சுட்டெரிக்கும் முன் நடத்துவோம். உள்ளூர் இளம் வயதினரும் மணமான பெண்களும் காயமடைந்த ஆண்களும் எனக் கலவையான குடிப்படை ஒன்றில் நானும் ஓபியும் சேர்ந்திருந்தோம். வகுப்புகளுக்குப் பின் புதர்களுக்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஐக்கியப் படைவீரர்களையோ பியாஃப்ர நாசகாரர்களையோ கண்டுபிடித்து விடலாம் என்று போனாலும், நாங்கள் கண்டுபிடித்தது என்னவோ காய்ந்த பழங்களையும் வேர்க்கடலைகளையும் தான். இறந்து போன நைஜீரியர்களைப் பற்றிப் பேசினோம், பியாஃப்ரவை ஆதரிக்கும் ஃபிரெஞ்ச் மற்றும் டான்சானியர்களைப பற்றிப் பேசினோம், பிரிட்டானியர்களின் பொல்லாங்கையும் பற்றிப் பேசினோம். இறந்து போன பியாஃப்ரர்களைப் பற்றிப் பேசவில்லை. புரதக் குறைவைத் தடுக்கும் என்று கருதப்பட்ட மரத்தைப் பயன்படுத்திய மருத்துவ முறை பற்றியோ, அது எப்படி செயல்படுகிறது என்றோ, புரதக் குறைவின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் எத்தனை குழந்தைகள் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றோ நாங்கள் பேசவில்லை. அது வெறும் புரட்டு என்று எனக்குத் தெரியும், அம்மரத்தின் இலைகளை யாருமே சாப்பிட மாட்டார்கள், அந்த இலைகள் குழந்தைகளின் வயிற்றை நிரப்பினாலும், புரதச் சத்தைக் கட்டாயம் தரப் போவதில்லை. ஆனால், அம்மாதிரியான கதைகளை நம்புவது எங்களுக்குத் தேவையாயிருந்தது. கருமம் பிடித்த குச்சிக் கிழங்கு மட்டுமே சாப்பிட முடியும் போது, மற்ற எல்லாவற்றையும் – அதுவும் எதை நம்ப வேண்டும் எதை நம்பக் கூடாது என்பதை – வெறியுடனும் சுயநலத்துடனும் கையாள வேண்டியிருந்தது.

நாங்கள் சொல்லிக் கொண்ட கதைகள், தாலாட்டும் எங்கள் குரல்கள், எனக்கு மிகவும் களிப்பாயிருந்தன, ஒரு குறிப்பிட்ட நாள் வரை. நாங்கள் பயன்பாட்டில் இல்லாத ஒரு பண்ணையில் உயர்ந்த புல்லினிடையே போய்க் கொண்டிருக்கும் போது எதன் மேலோ இடறினோம். ஓர் உடல். நான் அதைப் பார்க்கும் முன்னேயே அதன் மணம் – என் வாயடைத்து மூச்சு முட்டி தலை லேசானது போல ஒரு மணம். “ஹேய், அது ஒரு நைஜீரியன்” என்றாள் ஒரு பெண்மணி. அந்த நைஜீரிய வீரனின் ஊறி உப்பிய உடலில் ஈக்கள் மொய்த்திருக்க நாங்கள் அதைச் சுற்றி நின்றோம். அவன் தோல் சாம்பல் நிறத்தில், கண்கள் திறந்து, அவன் இனத்தினருக்கான சின்னங்கள், ஆழமான அச்சுறுத்தும் கோடுகளாய், அவன் உப்பிய முகத்தில் ஓடியிருந்தன. ஒரு சிறுவன் “நான் மட்டும் அவனை உயிரோடு பார்த்திருக்கணும்” என்றான். “ந்கக்வு, அசிங்கம் பிடித்த எலி” என்று யாரோ சொன்னார். ஒரு சிறுமி அந்த உடலின் மேல் துப்பினாள். கழுகுகள் சில அடி தூரத்தில் வந்து அமர்ந்தன. ஒரு பெண் வாந்தி எடுத்தாள். யாருமே அந்த உடலை புதைக்க வேண்டும் என்று யோசனை சொல்லவில்லை. நான் அந்த துர்மணத்தினாலும் மொய்க்கிற ஈக்களாலும் சூட்டினாலும் தலை கிறுகிறுக்க, நான் அங்கே நின்று, அவன் எப்படி செத்திருப்பான், அதுவரை அவன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று வியந்து கொண்டிருந்தேன். அவன் குடும்பத்தைப் பற்றி வியந்தேன். அவன் மனைவி வெளியே பார்த்தபடி, வழி மேல் விழி வைத்து கணவன் பற்றிய சேதிக்காகக் காத்திருப்பாள். “அப்பா வீட்டுக்கு சீக்கிரம் வந்திடுவார்” என்று சொல்ல வேண்டிய சின்னக் குழந்தைகளிருக்கும். வீரமகன் கிளம்பும் போது அழ ஓர் அம்மா இருந்திருப்பார். சகோதரர்களும், சகோதரிகளும், சகோதரமுறைகளும். இன்னும் அவன் விட்டுச் சென்றிருக்கக் கூடிய கவைகளைப பற்றி கற்பனை செய்து கொண்டேன் – துணிமணிகள், தொழுகை விரிப்பு, குனு[xii] குடிக்க ஒரு சின்ன மரக் கோப்பை.

நான் அழத் தொடங்கினேன்.

ஓபி என்னைப் பிடித்துக் கொண்டு, என்னை வெறுப்புடன் பார்த்தான். “இவனைப் போன்றவர்கள் தான் இஃபேகா சித்தியைக் கொன்றிருப்பார்கள்”, என்றான். “இவனைப் போன்றவர்கள் தான் கருவிலிருக்கும் குழந்தைகளையும் எடுத்து தலை வெட்டி இருப்பார்கள்”. நான் ஒபியைப புறந்தள்ளி விட்டு அழுது கொண்டே இருந்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – மற்ற மீன்களை உண்ணாத மீன் கொழுப்பதில்லை.

ந்நாம்டி பற்றி ஒரு செய்தியும் இல்லை. அண்டையில் வசிப்பவர் அவர்களின் மகன்களிடமிருந்தோ கணவர்களிடமிருந்தோ போர்முனையிலிருந்து செய்தி பெறும்போது, அவர்களின் அறைகளில் அவர்களின் நல்ல நேரம் எனக்கு வந்திடாதா என்ற நப்பாசையில் நாள்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பேன். ‘ந்நாம்டி நன்றாக இருக்கிறான்’ என்று ஓபி சாதாரணமான தொனியில் சொன்னபோது அதை நம்பி விடவே விரும்பினேன். அவன் அவித்த குச்சிக்கிழங்கும், பூஞ்சை பிடித்த வள்ளிக்கிழங்கும் சாப்பிட்ட அந்த மாதங்களில், நல்ல எண்ணெயும் மீனும் உப்பும் பற்றி நாங்கள் எங்கள் கனவுகளைப் பேசிக் கொண்ட அந்த மாதங்களில் அதைத்தான் அடிக்கடி சொன்னான்.

அண்டை வீட்டினரிடமிருந்து, நான் இருந்த கொஞ்சம் உணவையும் பாயில் சுற்றி, கதவுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விடுவேன். அண்டை வீட்டினரும் அவர்களின் உணவை ஒளித்தனர். மாலை வேளைகளில் உணவைத் திறந்து சமையலறையில் குழுமி சமைத்து, உப்பைப் பற்றிப் பேசிக் கொள்வோம். நைஜீரியாவில் உப்பு இருந்தது; உப்புக்காகத் தான் எம் மக்கள் எல்லையைத் தாண்டி அந்தப் பக்கம் செல்கிறார்களாம், உப்புக்காகத் தான் இந்தத் தெருக் கோடியில் ஒரு பெண் அவள் சமையலறையிலிருந்து ஓடி, துணிமணிகளைக் கிழித்து, தரையில் புரண்டு புலம்பினாளாம். நான் சமையலறைத் தரையில் அமர்ந்து பேச்சுச் சத்தத்தைக் கேட்டு, உப்பு எப்படி சுவைத்தது என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு கிறிஸ்ட[xiii]லாலான உப்புக்குடுவை வீட்டில் இருந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது, அதீதக் கற்பனையாக இப்போது தோன்றுகிறது. உப்பை வீணடித்திருக்கிறேன், அடியில் கட்டியாயிருந்த உப்பைக் கழுவித் தள்ளி விட்டு உப்பை குடுவைக்குள் திரும்ப நிரப்பியிருக்கிறேன். புதிய உப்பு. ந்நாம்டியின் நினைவுகளும் உப்பின் நினைவுகளுமாக மாறி மாறி நினைத்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் பழைய பாதிரியார் ஃபாதர் டேமியன், இரண்டு ஊர் தாண்டி, அமான்டுக்பாவில் ஒரு அகதி முகாமில் பணிபுரிவதாக அகுபூசி சொன்னபோது, நான் உப்பைத் தான் நினைத்தேன். அகுபூசிக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, கதைகள் பல பேரையும், பல ஊர்களையும் சுற்றி வந்தன. இருந்தாலும், ஃபாதர் டேமியனைப் போய்ப் பார்க்கலாம் என்று நான் அம்மாவைத் தூண்டினேன். அம்மாவும் சரியென்றாள்; அதுவும் அவரைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டதால், அவருக்கு உடல்நலம் நன்றாயிருக்கிறதா என்று பார்த்து வரலாமென்றாள். நான் அவளிடம் கேலியாகச் சொன்னேன்- யாரையும் போய்ப் பார்த்து நாளாகிவிட்டதால், என்னவோ இன்னும் உறவுநட்பைப் போய்ப் பார்க்க முடியுமா என்று. கரிடாஸ் இன்டர்நேஷனாலிஸ் பாதிரியார்களுக்கு இரவு இரகசியப்பயணம் மூலமாக உணவு அனுப்புவதைப் பற்றி நாங்கள் பேசவில்லை, அந்த உப்பிட்ட மாட்டிறைச்சி, குளூகோஸ், பால்பொடி உணவுப் பொருள்களை பாதிரியார்கள் தேவைப்பட்டவர்களுக்கு விநியோகித்து விடுவார்கள். உப்பையும்.

biafra warஃபாதர் டேமியன் இன்னும் இளைத்திருந்தார்; குழிகளும் நிழல்களும் அவர் முகத்தை நிறைத்திருந்தன. ஆனால், அகதி முகாமிலிருந்த குழந்தைகள் அருகில் வைத்துப் பார்க்க நலம் போலத் தானிருந்தார். குச்சி போல் மெலிந்திருந்த குழந்தைகளின் எலும்புகள் இயல்பாயில்லாமல் கூர்மையாய்த் துருத்திக் கொண்டு இருந்தன. துருப் பிடித்தாற் போன்ற வண்ண தலைமுடியும் பலூனாய் உப்பியிருந்த வயிறுகளுமாக, குழந்தைகள். முகமே விழுங்கி விட்டாற்போல ஆழத்தில் கண்களுமாக, குழந்தைகள். ஃபாதர் டேமியன் என்னையும் அம்மாவையும் மற்ற பாதிரிகளுக்கு அறிமுகப் படுத்தினார், அவர்கள் புனித ஆவியின் ஐரிஷ் சமயப்பரப்புக் குழுவினர். வெயிலில் உடல் சிவந்த வெள்ளையர்கள். அவர்களின் தைரியம் மிகுந்த சிரிப்பைப் பார்த்தால், முகத்தை இழுத்து, சிரிப்பு நிசம் தானா என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஃபாதர் டேமியன் தன் வேலையைப் பற்றியும், இறந்து கொண்டிருந்த குழந்தைகளைப் பற்றியும் பேசப் பேச, அம்மா பேச்சை மாற்றிக் கொண்டே இருந்தாள். இதே போல வேறு யாராவது பேச்சை மாற்றினால், என்ன நாகரிகமே இல்லாமல் இருக்கிறார் என்று சொல்லக் கூடிய அம்மாவே இல்லை அது. ஃபாதர் டேமியன் குழந்தைகளைப் பற்றியும் குழந்தைகளின் புரதக் குறைவு[xiv] பற்றியும் பேசுவதை நிறுத்தினார். நாங்கள் கிளம்பிய போது அவர் ஏமாற்றம் அடைந்தாற் போலிருந்தது. அவர் கொடுத்த உப்புப் பை , உப்பிட்ட மாட்டிறைச்சி, மீன் பொடி எல்லாவற்றையும் அம்மா எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் வீட்டுக்கு திரும்புகையில் ‘ஃபாதர் டேமியன் ஏன் இப்படி அந்தக் குழந்தைகளைப் பற்றி நம்மிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்?’ என்று அம்மா இரைந்தாள். நான் “அவர்களுக்காக நாம் என்னம்மா செய்து விட முடியும்?” என்று அவளைச் சமாதானப் படுத்தினேன், அதுவும் ஃபாதருக்குத் தம் வேலையைப் பற்றி யாரிடமாவது பேசத் தோன்றியிருக்கும் – அம்மாவுக்கு நினைவிருக்கிறதா சர்ச்சின் சந்தைகளில் ஃபாதர் சிறுபிள்ளைத்தனமான பாடல்களை, குழந்தைகளை சிரிக்க வைப்பதற்காக எப்படி அபசுரமாகப் பாடுவார் என்றெல்லாம் – நினைவு படுத்தினேன்.

ஆனால் அம்மா இரைந்து கொண்டே வந்தாள். நானும் பதிலுக்குக் கத்த, சொற்கள் வாயிலிருந்து உருண்டோடி வந்தன. என்ன இழவுக்கு இந்த ஃபாதர் டேமியன், அந்த இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பற்றி எங்களிடம் சொல்ல வேண்டும்? எங்களுக்கு தெரிய வேண்டும் என்று என்ன அவசியம்? நாங்கள் படும் பாடே போதாதா?

இரைச்சல். தெருவில் ஓர் ஆள் சேகண்டியை அடித்துக் கொண்டு, செயிண்ட். ஜான்ஸ்-இல் அமைக்கப் பட்ட புதிய மீட்புப்பணி மையத்துக்காக, உணவுப் பொருள்களை விமானம் மூலம் கொண்டு வரும் அந்த நல்ல வெள்ளையர்களுக்காக எங்களைப் பிரார்த்தனை செய்யச் சொன்னான். எல்லா வெள்ளையர்களும் கொலைகாரர்கள் இல்லை, டாண் டாண், டாண், அவர்கள் எல்லோரும் நைஜீரியர்களுக்கு ஆயுதம் கொடுக்கவில்லை, டாண், டாண், டாண்.

மீட்புப் பணி மையத்தில், கூட்டத்துக்கிடையில் சவுக்குகளை வைத்து ஒழுங்கு செய்த படைவீரர்களிடமிருந்து தப்பி, முண்டி மோதி முன்னேறினேன். பொய் சொன்னேன், கொஞ்சினேன், கெஞ்சினேன். பிரிட்டானிய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசினால், என்னை எப்படிப் படித்தவள் என்று காட்டிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் மற்ற சாதாரண கிராமத்தார்கள் போலில்லாமல் என்னை வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொண்டேன்; உடனே என் கண்களில் நீர், கண்களைச் சிமிட்டினால் கண்ணீர் விழுந்து விடுமோ என்பது போல் கட்டியது. ஆனால், நான் வீட்டுக்குப் போகும் போது, கண்களைச் சிமிட்டாமல், பெரிய முட்டை போல் திறந்து வைத்து, கிடைத்த உணவை கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டேன். நான் உணவை வாங்கிய போது. உலர்ந்த முட்டைக்கரு. பால் பவுடர். கருவாட்டு மீன். சோளமாவுணவு.

குண்டு அதிர்ச்சியில் இருந்த வீரர்கள், மீட்புப் பணி மையத்தில், அழுக்கான சட்டைகளில், தெளிவில்லாமல் உளறிக் கொண்டு அலைய, குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். வீரர்கள் என்னைத் தொடர்ந்து வந்து, முதலில் கெஞ்சினர், பின்னர், என்னிடம் இருந்த உணவைப் பிடுங்கப் பார்த்தனர். நான் அவர்களைத் தள்ளினேன், சபித்தேன், அவர்களைப் பார்த்து துப்பினேன். ஒரு முறை, அவர்களை அத்தனை வேகமாகத் தள்ளிய போது அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான், நான் அவன் எழுந்தானா என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ந்நாம்டியைப் போன்று அவர்களும் ஒரு காலத்தில் கர்வமிக்க பியாஃபரா வீரர்களாக இருந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

மீட்புப் பணி மையத்திலிருந்து வந்த உணவால் ஓபிக்கு சீக்கு பிடித்ததோ, இல்லை நாங்கள் சாப்பிட்ட மற்ற ஏதாவதோ – நீலமாக இருந்த பூஞ்சையை எடுத்துச் சாப்பிட்ட ஏதாவதோ, இல்லை எறும்புகளைப் பிடித்து அகற்றிச் சாப்பிட்ட ஏதாவதோ. அவன் வாந்தி எடுத்தான், அவன் வயிறு காலியான பின்னும், ஒக்காளமிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டான். அம்மா, அவனுக்காக ஒரு பழைய பக்கெட்டைக் கொண்டு வந்து, அவன் அதைப் பயன்படுத்த வசதியாக வைத்து, பின்னர் அதை வெளியே எடுத்துக் கொண்டு போனாள். ஓபி ‘நான் ஒரு மலப்பானை[xv] மனிதன்’ என்று தன்னையே கேலி செய்து கொண்டான். அவன் இன்னமும் பாடங்கள் சொல்லிக் கொடுத்தாலும், பியாஃபரா பற்றிக் குறைவாகவும் கடந்த கால நிகழ்வுகள் பற்றி நிறையவும் பேசினான் – ‘அம்மா எப்படி தன் முகத்துக்கு தேனும் பாலும் கொண்டு முகப்பூச்சு செய்து கொள்வாள் என்று உனக்கு நினைவு இருக்கிறதா?’ ‘நம் வீட்டுக் கொல்லையில் இருந்த சீத்தாப்பழ[xvi] மரத்தில் மஞ்சள் தேனீக்கள் அதன் மேல் வரிசையாய் இருக்குமே, உனக்கு நினைவு இருக்கிறதா?’ என்றெல்லாம் என்னைக் கேட்டான். அம்மா அல்பட்ராஸ் மருத்துவமனைக்குப் போய், அங்கிருந்த மருத்துவர் தாழ்வாரங்களில் அலைமோதிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்க்கும் முன் அப்படியாவது அம்மாவைப் பார்ப்பார் என்ற நம்பிக்கையில், அவளுக்கு ஈனுகுவில் தெரிந்த எல்லா பிரபல மருத்துவர்கள் பெயர்களையும் சொல்லிப் பார்த்தாள். அவள் தந்திரம் பலித்து, மருத்துவர் அம்மாவுக்கு பேதி மாத்திரை கொடுத்தார். அவரால் ஐந்து மாத்திரைகள்தான் கொடுக்க முடிந்ததால், அம்மாவிடம் ஒவ்வொரு மாத்திரையையும் இரண்டாக ஒடித்து, ஓபியின் பேதியை எவ்வளவு நேரம் கட்டுப்படுத்த முடியுமென்று பாருங்கள் என்று சொல்லி விட்டார். அம்மா அந்த “மருத்துவர்” மருத்துவக் கல்லூரியில் நாலாவது வருடம் கூடப் படித்தாரோ என்பது சந்தேகம் என்றாள்.ஏனென்றால், பியாஃபரா இரண்டு வருடங்களாக போரில் மூழ்கியிருக்க, மருத்துவ மாணவர்கள் கூட மருத்துவர்கள் போல நடிக்க வேண்டியிருந்தது. உண்மையான மருத்துவர்கள் மக்களை உயிரோடு வைத்திருக்க காலையும் கையையும் அறுக்க வேண்டியிருந்தது. அம்மா, அல்பட்ராஸ் மருத்துவமனையின் கூரையில் ஒரு பகுதி, ஒரு விண் தாக்குதலில் இடிந்து விட்டது என்றாள். அது எனக்கு வேடிக்கையாகவே இல்லை, ஆனால், ஓபி சிரிக்க, அம்மாவும் சேர்ந்து சிரிக்க, கடைசியில் நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்தேன்.

ஓபி இன்னமும் நோய்வாய்ப் பட்டு, படுக்கையில் இருந்த போது, இஹுஓமா எங்கள் அறைக்கு ஓடி வந்தாள். அவளுடைய மகள் ஏதோ நறுமணப் பொருளும் மூத்திரமும் கலந்த எதோ நாற்றமடிக்கும் கலவையை முகர்ந்தால் ஆஸ்த்மா குணமாகும் என்று முகர்ந்து பார்த்தவாறு வெளிமுற்றத்தில் கிடந்தாள். “போர் வீரர்கள் வருகிறார்கள்” என்றாள் இஹுஓமா. அவள் ஓர் எளிய மனுஷி, சந்தை வியாபாரி. பியாஃபரா நிகழும் முன் அம்மாவுடன் எதுவுமே சம்பந்தம் இருந்திருக்க இயலாத ஒரு பெண். ஆனால், அவளும் அம்மாவும் ஒருவருக்கொருவர் வாரந்தோறும் தலைபின்னிக் கொண்டார்கள்*. அவள் “சீக்கிரம்” என்றாள். “ஓபியை வெளியறைக்குக் கொண்டு வாங்க, அவன் கூரையில் ஒளிந்து கொள்ளட்டும்”. எனக்குப் புரிய ஒரு நிமிடம் பிடித்தாலும், அம்மா ஓபியை எழச் செய்து அவனை அறையிலிருந்து வெளியே அவசரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். பியாஃபிர வீரர்கள் இளைஞர்களை, அதுவும் சிறுவர்களை, போர்முனைக்குக் கொண்டு சென்றார்கள் என்று கேள்விப்பட்டிருந்தோம். அதுவும், எங்கள் தெருக்கோடியிலேயே ஒரு வெளி முற்றத்தில் ஒரு வாரம் முன் நடந்தது என்று. ஆனால், ஓபி அப்படி பனிரெண்டு வயதுடைய சிறுவனைக் கூட்டிச் செல்வார்களா என்று சந்தேகப்பட்டான். அப்படிக் கூட்டிச் செல்லப்பட்ட பையனின் அம்மா அபகலிகி(Abakaliki)யைச் சேர்ந்தவளாம், அங்கே குழந்தை இறந்தால், பெற்றவர்கள் அவர்களின் தலைமுடியை எடுத்து விடுவார்களாம், பெற்ற மகன் அப்படிக் கூட்டிச் செல்லப் பட்டதைப் பார்த்தவள் ஒரு சவரக்கத்தியை எடுத்து அவள் தலையை மொட்டை அடித்துக் கொண்டாளாம்.

கூரையில் இருந்த குண்டு விழுந்த பின் கூரையில் இருந்த மரப்பலகை விழுந்து வந்த ஓட்டைக்குள் ஒளிந்திருந்த ஓபியையும், இன்னும் இரண்டு சிறுவர்களையும் தேடி விரைவிலேயே படைவீரர்கள் வந்தார்கள். எலும்பும் தோலும் அயர்வான கண்களையும் உடைய நான்கு வீரர்கள். ந்நாம்டியை அவர்களுக்குத் தெரியுமா என்று நான் கேட்ட போது, அவர்கள் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று நான் அறிந்திருந்தேன். வீரர்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தார்கள். அம்மாவிடம் வந்து அவள் யாரையும் ஒளித்து வைத்திருந்தால், அவள் நைஜீரியர்களை விட மோசமான வஞ்சகி ஆகி விடுவாள் என்றெல்லாம் சொன்னார்கள். அம்மா அவர்களைப் பார்த்து சிரித்து, அவளின் பழைய இனிய குரலில் அவர்களிடம் பேசினாள். அப்பாவின் நண்பர்களுக்கு மூன்று பந்திச் சாப்பாட்டு விருந்து வைத்து அவர்கள் கிளம்பும் முன் தண்ணீர் அருந்துகிறார்களா என்று கேட்கும் இனிய குரல். வீரர்கள் கிளம்பிய பின், ஓபி படையில் அவனும் சேர்ந்திருந்தால், தான் இன்னும் உடல்நலமாகி இருக்கக் கூடும் என்றான். பியாஃபராவுக்காகவும், அத்தோடு பதினைந்து வயதினர்கள் எல்லாம் பாரசீகப் போரில் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்களே அவர்களுக்காகவும் என்றான். அம்மா அறையை விட்டுப் போகும் முன், ஓபி பக்கம் போய் அவனை அறைந்தாள்; அவள் அறைந்த வேகம் அவன் கன்னத்தில் மெல்லிய வரிகளாய் இருந்ததைப் பார்த்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – கோழி சமையற் பானையைப் பார்த்துச் சினமடைந்தாலும் அது கத்தியை அசட்டை செய்கிறது.

விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் சத்தம் கேட்டபோது அம்மாவும் நானும் பதுங்கு குழிக்குப் பக்கத்தில் இருந்தோம். ‘செம டைமிங்’ என்று அம்மா கேலி செய்தாள், முயற்சி செய்தாலும் என்னால் சிரிக்க முடியவில்லை. என் உதடுகள் ரணமாய் இருந்தன; நாங்கள் மீட்புப் பணி மையத்துக்கு நடந்து சென்ற போது ஹார்மட்டான் காற்றில் உதடுகள் காய்ந்து ரத்தக் கோடுகளாகி இருந்தன; அத்தோடு, எங்கள் துரதிருஷ்டம் உணவு எதுவும் கிடைக்கவும் இல்லை.

பதுங்கு குழியில், மக்கள் “கடவுளே, ஏசப்பா, எல்லாம் வல்ல இறைவா, ஜேஹோவாஹ்” என்றெல்லாம் இரைந்தார்கள். என் அருகில் ஒரு பெண் குறுகி அமர்ந்திருந்தாள், அவள் குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு. பதுங்கு குழி இருட்டாய் இருந்தாலும், படர்தாமரை நோயின் காய்ந்த வடுக்கள் குழந்தையின் மேல் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அம்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். “ஓபி எங்கே?” என்று என் கையை இறுகப் பிடித்தவாறே கேட்டாள். “அந்தக் கடங்காரனுக்கு என்ன ஆச்சு, துப்பாக்கிச் சத்தம் கேட்கலையா அவனுக்கு?” அம்மா ஓபியைக் கண்டுபிடிக்க வேண்டும், குண்டு எங்கோ தூரத்தில் இருக்கு என்றவாறே எழுந்தாள். ஆனால், உண்மையில் அது மிக அருகில், மிக சத்தமாய்க் கேட்டது. அம்மாவை அசையாமல் இறுகப் பிடித்துக் கொண்டேன்; ஆனால், அவ்வளவு தூரம் நடந்ததாலும் பசியாலும் பலவீனமாய் இருந்தேன். அம்மா என்னைத் தள்ளி விட்டு வெளியேறிச் சென்று விட்டாள்.

அடுத்து வந்த குண்டுச் சத்தம் என் காதுக்குள் எதுவோ கழன்று போனால் போலிருந்தது. நான் மட்டும் என் தலையை பக்கவாட்டில் சாய்த்தால், மெதுவும் கெட்டியானதுமாக சவ்வோ எதுவோ விழுந்து விடும் என்று தோன்றியது. மேலே ஏதேதோ உடைந்ததையும், மேலே விழுந்ததையும் கேட்டேன் – சிமென்ட் சுவர்களும் கண்ணாடிச் சாளரங்களும் மரங்களும். நான் கண்களை மூடி ந்நாம்டியின் குரலை, அவன் குரலை மட்டும், குண்டு வெடிப்பு நின்று நான் பதுங்குகுழியை விட்டு வெளி வரும் வரை நினைத்துப் பார்த்தேன். தெருவில் உடல்கள் சிதறிக் கிடந்தன, அதுவும் பதுங்கு குழி நுழைவுக்கு அருகேயே, சில உடல் பாகங்கள் துடிதுடித்தும், சுருண்டு புரண்டும். எங்கள் வேலையாள் ஈனுகுவில் கொன்ற கோழிகள் நினைவுக்கு வந்தன – கழுத்து வெட்டப்பட்ட பின்னும் அவை திரும்பத் திரும்ப சிறகடிப்பதுவும், இறுதியாக அமைதியாக விழுந்து கிடப்பதுவும். ஓபி அதை ‘தன்மான நடனம்’ என்று சொல்வான். நான் அறிந்தவர்களின் உடல்களைப் பார்த்துக் கதறினேன், அம்மாவும் ஒபியும் அங்கே இருக்கிறார்களா என்று அடையாளம் தேடிக் கொண்டே. ஆனால் அவர்கள் அங்கே இல்லை. அவர்கள் முற்றத்தில் இருந்தார்கள், அம்மா அடிபட்டவர்களைக் கழுவ உதவி செய்து கொண்டிருந்தாள், ஓபி தூசியில் விரலால் எழுதிக் கொண்டிருந்தான். அம்மா, ஓபி சிறிது நேரம் முன் காட்டிய அஜாக்கிரதைக்காக அவனைக் கோபிக்கவில்லை. நானும் அம்மா அப்படி வெளியே ஓடியதற்காக அம்மாவைத் திட்டவில்லை. நான் காய்ந்த குச்சிக் கிழங்கை நீரில் ஊற வைத்து இரவு உணவு செய்ய சமையலறைக்குள் போனேன்.

ஓபி அன்றிரவு இறந்தான். அல்லது அவன் காலையில் இறந்தான். எனக்குத் தெரியவில்லை. அப்பா காலையில் அவனைத் தட்டியதும் அவன் எழவில்லை. உடனே அம்மா அவன் மேல் விழுந்தாள், அப்போதும் அவன் நகரக் கூட இல்லை. நான் போய் அவனை உலுக்கினேன், உலுக்கினேன், உலுக்கினேன். அவன் உடல் சில்லிட்டிருந்தது.

“ந்வ்ஆ ம் அன்வ்உகோ” அப்பா சொன்னார், அப்படி பலக்கச் சொன்னால் தான் அவரே நம்புவார் போல. அம்மா தனது நகச் சீர்திருத்தும் பெட்டியை எடுத்து வந்து ஓபியின் நகங்களை வெட்டத் தொடங்கினாள். அப்பா “என்ன செய்யிறே நீ” என்றார். அவர் அழுது கொண்டிருந்தார். மௌனமும் கண்ணீருமான ஆணின் அழுகையல்ல அது. அவர் கதறினார், தேம்பினார். நான் அவரையே பார்த்தேன், அவர் என் கண் முன்னால் பெரிதாகி, அறையே ஆட்டம் காணத் தொடங்கியது. என் நெஞ்சின் மேல் ஏதோ பெரும் எரிபொருள்குடுவை[xvii] போல ஏதோ பளுவான ஒன்று இருந்தாற் போலிருந்தது. நான் தரையில் புரண்டு அந்த பளுவை எடுத்து விடப் பார்த்தேன். வெளியே யாரோ கத்தியது கேட்டது. உள்ளிருந்து தான் கேட்கிறதோ? அப்பாவா அது? அப்பாவா சொல்கிறார் – “ந்வ்ஆ ம் அன்வ்உகோ“” “ந்வ்ஆ ம் அன்வ்உகோ“”. ஓபி இறந்து விட்டான். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன், வெறி பிடித்தாற் போல, ஓபியை நினைவில் கொள்ள, அவனைச் சுற்றியும் இருந்த சிமெண்டு பொருள்களை நினைவில் கொள்ளைப் பார்த்தேன். என்னால் முடியவில்லை. அகடவிகடம் செய்யும் என் ஆசைத் தம்பி , ஆனால் என்னால் ஒன்றையும் நினைவில் கொள்ள முடியவில்லை. அவன் நேற்றிரவு என்ன சொன்னான் என்று கூட என்னால் நினைவு கொள்ள இயலவில்லை. ஓபி என்னோடு பலப் பல காலம் இருப்பான் என்றிருந்ததாலோ என்னவோ, நான் அவனைச் சரியாகக் கவனித்ததில்லை, உண்மையாகக் கவனித்தது இல்லை. அவன் அங்கே இருந்தான், எனவே அவன் எப்போதுமே இருப்பான் என்று நம்பி விட்டேன். ஓபியோடு இருந்தபோது அச்சம் – ந்நாம்டியுடன் இருக்கும்போது, எங்கே ஒரு நாள் அவன் இறந்து நான் துயரப்படுவேனோ என்ற அச்சம் – வராது. அத்தோடு, ஒபியின் மறைவை எப்படி துக்கம் கொண்டாடுவேன், ஓபியை துக்கிக்க முடியுமா என்ன? என் தலைமுடி அரித்தது, நான் அதைப் பிய்க்கத் தொடங்கினேன், என் தலையில் வெதுவெதுப்பாய் இரத்தம் வரும் வரை. அதன் பின் இன்னும் கொஞ்சத்தைப் பிய்த்தேன், இன்னமும் கொஞ்சம். என் தலைமுடி எங்கள் தரையில் விழுந்து கிடக்க, என் கைகளால் என்னையே இறுகக் கட்டிக்கொண்டு, அம்மா ஒபியின் விரல் நகங்களைச் ஒரே சீராகத் தேய்ப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒபியின் இறப்புக்குப் பின் வந்த நாள்களில் காய்ச்சல் வந்தாற் போல அதுவும் மலேரியா காய்ச்சல் வந்தாற் போல, உணர்ச்சியற்று வெகு விரைவில் மரத்துப் போன நிலைக்கு ஆளாகியிருந்தேன். ஓபியை கொல்லையிலேயே புதைத்தது கூட விரைவாகத் தான் நடந்தது, அப்பா தான் பல மணி நேரங்கள் செலவழித்து ஒரு சிலுவையை பழைய மரத் துண்டுகளைக் கொண்டு செய்திருந்தார். அண்டை வீட்டினரும், ஃபாதர் டேமியனும் அழுது கொண்டிருந்த குழந்தைகளும் கலைந்து போனவுடன், அம்மா அந்த சிலுவை அவலட்சணமாய் இருக்கிறது என்று அதை உதைத்து உடைத்து மரத்துண்டுகளைத் தூக்கிப் போட்டாள்.

அப்பா போர் ஆராய்ச்சி மையத்துக்குப் போவதை நிறுத்தியிருந்தார். அவரது நாட்டுப் பற்றைக் காட்டும் டையை, கழிவறையின் குழிக்குள் போட்டு விட்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் எங்கள் அறையின் முன் – அப்பா, அம்மா, நான்- வெளிமுற்றத்தைப் பார்த்து அமர்ந்திருந்தோம். ஒரு நாள் காலை, ஒரு பெண் தெருவில் ஓடி வந்து எங்கள் முற்றத்துக்கு வந்த போது நான் தலையெடுத்துக் கூட பார்க்கவில்லை, அவள் கூப்பாடு போடும் வரை. அவள் ஒரு பசும் கிளையை ஆட்டிக் கொண்டிருந்தாள். ஒளியும் ஈரமும் மிக்க பசுமை நிறைந்த கிளை. அவள் எங்கே இருந்து அதைக் கொண்டு வந்தாளோ? எங்களைச் சுற்றி இருந்த செடிகளும் மரங்களும் ஜனவரி மாத ஹார்மட்டான் வெயிலில் கருகிப் போய், தூசிக் காற்றில் மொட்டையாகி நின்றிருந்தன. மண் நோய்வாய்ப் பட்டாற் போலிருந்தது.

போரில் தோற்றோம் என்றார் அப்பா. அவர் சொல்லியிருக்க வேண்டியதே இல்லை, எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ஓபி இறந்த போதே தெரிந்திருந்தது. அண்டை வீட்டினர் எல்லாம் அவர்களின் குக்கிராமங்களுக்குச் செல்ல அவசரமாக மூட்டை கட்டிக் கொண்டிருந்தனர். ஐக்கியப் படையினர் வண்டி வண்டியாக சாட்டைகளோடு வருகிறார்கள் என்று கேள்விப் பட்டதால். நாங்கள் மூட்டை கட்ட எழுந்தோம். நாங்கள் வீட்டுச் சாமான்களை மூட்டை கட்டும் போது தான், எவ்வளவு குறைவான பொருள்கள் எங்களிடம் இருந்தன, எங்களிடம் குறைவாக இருக்கிறது என்பதைக் கூட நாங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதைக் கூட அப்போது தான், நான் கவனித்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – மனிதன் விழும் போது, அவனது கடவுள் தான் அவனைத் தள்ளி விட்டிருக்கிறார்.

ந்நாம்டி எங்கள் திருமணத்தின் போது என் கையை இறுகப் பிடித்திருந்தான். எதையுமே அவன் அதிக முயற்சியோடு செய்ய வேண்டியிருந்தது, வெட்டுப்பட்ட அவனது இடது கைக்கு ஈடு கொடுப்பது போல, அவன் தன் அவமானத்தை மறைப்பது போல. அப்பா புகைப்படம் எடுத்தார், என்னை ‘இன்னும் பெரிசாச் சிரி’ என்றும் ந்நாம்டியை ‘கூன் போடாதே’ என்றும் சொல்லிக் கொண்டே. அப்பாவே கூன் போடத் தொடங்கி இருந்தார், போர் முடிந்த போதே அவர் கூன் போடத் தொடங்கி இருந்தார். அவரிடம் இருந்த எல்லா பியாஃபரா பணத்துக்கும் ஈடாக, வங்கி அப்பாவுக்கு ஐம்பது நைஜீரிய வெள்ளிகளைக் கொடுத்தது முதல் கூன் போடத் தொடங்கி இருந்தார். அவரது வீட்டை இழந்திருந்தார், பளிங்கு மாடிப்படி கொண்ட எங்கள் வீட்டை. அது கைவிடப்பட்ட வீடு எனவும், அங்கே இப்போது ஒரு அரசாங்க அலுவலர் வாழ்வதாகவும் சொல்லிவிட்டார்கள். அம்மா, அப்பாவின் உத்தரவையும் மீறி தன் மனங்கவர் வீட்டைப் பார்க்கப் போன போது அந்த அரசாங்க அலுவல் பெண்மணி ஒரு மூர்க்கமான நாயை அம்மாவின் மேல் ஏவி விடுவேன் என்று பயமுறுத்தினாள். அம்மாவோ அந்தப் பெண்ணிடம் தன் உயர்ரகப் பீங்கானும் கிராமபோன் கருவியும் கிடைத்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்றிருக்கிறாள். அவள் பதிலுக்கு வேண்டுமென்றே தன் நாயைச் சீட்டியடித்துக் கூப்பிட்டாளாம்.

அம்மா “இரு இரு” என்று அப்பாவிடம் காத்திருக்கச் சொல்லி, என் (அலங்கார) தொப்பியைச் சரி செய்தாள். அவளே என் திருமண உடையைத் தைத்து, ஒரு பழைய தொப்பியில் ஜிகினா வைத்து அலங்கரித்துத் தைத்திருந்தாள். திருமண நிகழ்ச்சிக்குப் பின், ஒரு கஃபேயில் இனிப்புகள் சாப்பிடப் போனோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா என்னிடம் என் திருமண கேக்கைப் பற்றி அவர் செய்து வைத்திருந்த கற்பனை பற்றிச் சொன்னார்: அது ரோசா நிறத்தில் பல அடுக்குகளைக் கொண்டதாக, என் முகத்தையும் ந்நாம்டியின் முகத்தையும் மறைக்கும் அளவு உயரமானதாக இருக்கும், ஆனாலும் அந்த உயரமான கேக் வெட்டும் போது புகைப்படத்தில் மாப்பிள்ளைத் தோழனின் முகம் மட்டும்-ஓபியின் முகம் மட்டும்-வரும் என்று சொன்னார்.

எனக்கு அப்பாவின் மேல் பொறாமை எழுந்தது, எப்படி ஓபி பற்றி அவரால் அப்படி பேச முடிகிறது என்று. அந்த வருடம் ஒபிக்கு பதினேழு வயதாகியிருக்கும், அந்த வருடம் தான் நைஜீரியா வண்டியோட்டுவதை சாலையின் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றிய வருடம். நாங்கள் மீண்டும் நைஜீரியர்கள் ஆகியிருந்தோம்.

[i] டோகோன்யரோ-dogonyaro-வேப்ப மரத்துக்கு நைஜீரியப் பெயர்.

[ii] தாய்க்குப்பிறந்தவள்- ஆனால் தந்தை வேறுவேறு

[iii] க்மேலினா-gmelina (கிளி அலகு பூமரம்)

[iv] Enuku – ஏனுகு

[v] Pie – ரொட்டிக்குள் பழம் அல்லடு காய் நிரப்பி அடுமனையில் சுடப்பட்ட பணியாரம்

[vi] சீமைநூக்கு-mahagony

[vii] அநாரா-anara-நைஜீரியக் கத்தரி

[viii] ஸ்நிஃப்டர்-ப்ரான்டி / விஸ்கி போன்றன அருந்தும் மதுக் கோப்பை

[ix] ஹார்மட்டான் -ஆப்பிரிக்கப் பாலைநிலப் பருவக்காற்று

[x] நைஜீரிய மிளகு சூப் – பசுவின் வயிறுகள், மிளகு கொண்டு செய்யப்படும் ஒருசூப்

[xi] உக்பக ukpaka (எண்ணெய் மொச்சை)

[xii] குனு-kunu-கேழ்வரகு/சோளத்திலிருந்து செய்யப்படும் ஒரு பானம்

[xiii] கிறிஸ்டல்-உயர்தரக் கண்ணாடி

[xiv] புரதக் குறைவு- kwashiorkor

[xv] மலப் பானை-chamber பாட்-அரச/மேல் குலத்தாருக்கான மலப் பானை.

[xvi] sour sop -நைஜீரிய வகை சீத்தாப் பழம்

[xvii] எரிபொருள் குடுவை- jerry can

நன்றி - சொல்வனம்.